மும்பை: இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் முழுநேர கேப்டனாக பொறுப்பை ஏற்கவுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாக இருந்த நிலையில், அவருக்கு கேப்டன்சி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பின் மும்பை லாபி இருக்கிறதா, கவுதம் கம்பீர் எடுத்த முடிவு காரணமா அல்லது ஐபிஎல் தொடரின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு எழுந்த எதிர்ப்பு தான் இந்த முடிவுக்கு காரணமா என்ற விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரஸ்ஸல் அர்னால்ட் பேசுகையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவருமே மிகச்சிறந்த வீரர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

சூர்யகுமார் யாதவ் தலைசிறந்த டி20 பேட்ஸ்மேனாக உருவாகியுள்ளார். ஆனால் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரின் போது எடுத்த முடிவு அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கருதுகிறேன். ஏனென்றால் மும்பை அணியின் கேப்டனாக இருக்கும் போது ஹர்திக் பாண்டியாவால் அனைவரின் மரியாதையையும் ஈர்க்க முடியவில்லை. பிசிசிஐ வேறு முடிவை எடுப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
தற்போது கேப்டன்சி என்பது ஒவ்வொரு வீரரையும் மகிழ்ச்சியாக வைத்து, அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து சிறந்த ஆட்டத்தை பெறுவதே என்ற நிலைக்கு சென்றுவிட்டது. ஹர்திக் பாண்டியாவால் இதனை செய்ய முடியாது என்று சொல்லவில்லை. ஆனால் சூர்யகுமார் யாதவிற்கு இது சிறந்த வாய்ப்பு என்று நினைக்கிறேன். அவரின் திறமையை வெளிப்படுத்தவும், கேப்டன்சியை நிரூபிக்கவும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனை அவர் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய பயிற்சியாளர், புதிய கேப்டனுக்கு கீழ் இந்திய அணி எப்படி செயல்படும் என்பதே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் போது மும்பை அணியின் நிர்வாகத்தால் ரோஹித் சர்மாவின் இடத்திற்கு ஹர்திக் பாண்டியா கொண்டு வரப்பட்டார்.
அது மும்பை அணி வீரர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ரசிகர்கள் மத்தியிலும் பின் விளைவுகளை ஏற்படுத்தியது. இதனால் மும்பை அணி 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் நிறைவு செய்தது. இது ஹர்திக் பாண்டியாவின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.