பாலக்கல்லே : இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் இந்த போட்டியில் இந்திய அணி கடுமையாக தடுமாறியது. இது இந்திய ரசிகர்களை கலக்கமடைய செய்தது. எனினும் கடைசி கட்டத்தில் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 19.2 ஓவரில் 170 ரன்களில் சுருண்டது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி சரியாக பேட்டிங் செய்திருந்தால் 240 ரன்கள் கூட சென்றிருக்கும்.

ஆனால் நடுவரிசை வீரர்கள் தடுமாறினர். குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 10 பந்துகளை எதிர் கொண்டு 9 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி மட்டுமே அடங்கும், ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் மட்டும் தடுமாறாமல் பந்து வீச்சிலும் கடுமையாக சொதப்பினார்.
ஹர்திக் பாண்டியா நேற்றைய ஆட்டத்தில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக களமிறங்கி நான்கு ஓவர்கள் வீசி 41 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதில் விக்கெட் ஏதும் அவர் எடுக்கவில்லை. இது ஹர்திக் பாண்டியாவின் மோசமான பந்துவீச்சாக பார்க்கப்படுகிறது. இதனால் கேப்டன்சி கிடைக்கவில்லை என்ற காரணத்தால் வேண்டுமென்றே ஹர்திக் பாண்டியா மோசமாக செயல்படுகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் அடிக்கடி காயம் அடைகிறார் என்று காரணத்தைக் காட்டி சூர்யகுமார் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.இது ஹர்திக் பாண்டியாவின் உத்வேகத்தை நிச்சயமாக கொடுத்திருக்கும். எனினும் நல்ல பார்மில் இருந்த ஹர்திக் பாண்டியா திடீரென்று ஏன் இவ்வாறு சொதப்பி இருக்கிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஒரு காலகட்டத்தில் கம்பீரும், சேவாக்கும் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்திருந்தனர். ஆனால் தோனி கேப்டன் பதவியில் தொடர்வதை இருவரும் விரும்பவில்லை என்ற செய்திகள் வந்தது. இதனால் வேண்டுமென்று இருவரும் மோசமாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவாமல் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.
இதனை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த தோனி இருவரும் பார்மில் இல்லை எனக் கூறி அணியை விட்டு நீக்கிய சம்பவமும் நடைபெற்றது. தமக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை என கம்பீர் இவ்வாறு செயல்பட்டு இருக்கிறார் என்பது பழைய வரலாறு. எனவே கம்பீரின் இந்த டெக்னிக்கை அவரிடமே ஹர்திக் பாண்டியா செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.