மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சில நாட்களுக்கு முன்பாக தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை பிரிவதாக அறிவித்தார். 2018ஆம் ஆண்டு முதல் ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2020ஆம் ஆண்டு குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதன்பின் மீண்டும் 2வது முறையாக பிரம்மாண்ட கொண்டாட்டங்களுடன் நடாஷாவை 2020ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி ஹர்திக் பாண்டியா திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து சில மாதங்களிலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகஸ்தியா என்று பெயரிட்டனர். இதன்பின் இந்தியாவின் முக்கியமான நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர்.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின் இருந்த பாண்டியா என்ற வார்த்தையை நடாஷா நீக்கினார். இதன் மூலமாக இருவரும் பிரிந்து வாழ்வது தெரிய வந்தது. பின்னர் கடந்த வாரம் நடாஷா ஸ்டான்கோவிக் தனது மகனுடன் தனது சொந்த நாடான செர்பியாவுக்கு புறப்பட்டார்.
அதன்பின் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் 4 ஆண்டுகளுக்கு பின் இருவரும் குடும்ப வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதேபோல் மகன் அகஸ்தியாவின் வாழ்க்கைக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்ற உறுதியையும் ஹர்திக் மற்றும் நடாஷா இருவரும் கூறியிருந்தனர்.
தற்போது அகஸ்தியா, அவரின் அம்மா நடாஷாவுடன் செர்பியாவில் தான் இருக்கிறார். இவர்கள் இருவரும் செர்பியாவில் உள்ள டைனோசர் பூங்காவை சுற்றிப் பார்க்க சென்றுள்ளனர். அதன்பின் அந்த பூங்காவில் எடுத்த புகைப்படங்களை நடாஷா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த பதிவினை பார்த்த ஹர்திக் பாண்டியா, "ஹார்ட்" ஒன்றை கமெண்ட் செய்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இருவரும் பிரிந்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் க்ருணால் பாண்டியா மற்றும் அவரின் மனைவி ஆகியோருடனும் நடாஷா நல்ல நட்பில் இருந்து வருகிறார். குடும்ப வாழ்க்கையில் இருந்து பிரிந்தாலும், இருவரும் முதிர்ச்சியுடன் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.