மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் துணைக் கேப்டன் பதவிக்கும் சுப்மன் கில் கொண்டு வரப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருந்தார்.
இதனால் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான கவுதம் கம்பீர் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் 2 ஆண்டுகள் அனைத்து டி20 போட்டியிலும் விளையாடும் வகையிலான வீரருக்கு கேப்டன்சி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் காரணமாக தேர்வு குழுவினர் அவருக்கு கேப்டன்சியை அளிக்காதது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு முன் ஃபிட்னஸ் குறித்து ஹர்திக் பாண்டியா பேசியுள்ள வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.
அதில், 2017ல் நான் பவுலிங் செய்யும் பந்துகள் 130 கிமீ வேகத்தில் தான் இருக்கும். அதிகபட்சமாக 135 கிமீ வரை செல்லும். அந்த வேகத்தை அதிகரிக்க வேண்டுமென்றால் உடலை பராமரிக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். அதன்பின் என் உடல் குறித்தும் நன்றாக புரிந்து கொண்டு, அதற்கேற்ப வொர்க் அவுட் செய்ய தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாக சந்தித்த பின்னடைவுகளை சரி செய்து கொண்டே வந்தேன்.
மனித உடலை பொறுத்தவரை, ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டுமென்றால், நாம் கொஞ்சம் கடின உழைப்பை கொடுக்க வேண்டும். அதேபோல் ஃபிட்னஸ் உடன் இருப்பதற்கு மனதளவிலும் தயாராக வேண்டும் என்று நினைக்கிறேன். என் மனதில் எப்போதும் 16 வயது சிறுவனாகவே உணர்கிறேன். ஒவ்வொரு முறையும் எனது ட்ரெய்னர் 10 புஷ் அப்ஸ் எடுக்க வேண்டும் என்று சொன்னால், நான் 15 புஷ் அப்ஸ் எடுப்பேன்.
எனது கட்டுப்பாடுகளை நானே உடைக்க தொடங்கினேன். அங்கிருந்தே எனது ஃபிட்னஸ் பயணம் தொடங்கியது என்று தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவின் இந்த நேர்காணல் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ள நிலையில், கவுதம் கம்பீருக்கான பதிலடியாக பலரும் கூறி வருகின்றனர்.