மும்பை: இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரில் யாருக்கு கேப்டன் பொறுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா மைக்கேல் தளத்திற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளதால், இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் தேர்வுக் குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ள நிலையில், டி20 அணிக்கான கேப்டனாக பொறுப்பேற்கும் வீரர் அனைத்து போட்டிகளிலும் விளையாடக் கூடியவராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனால் இந்திய டி20 அணிக்கான கேப்டன் ரேசில் சூர்யகுமார் யாதவும் இணைந்துவிட்டார்.
ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் என்பதால், சூர்யகுமார் யாதவை கேப்டனாக கொண்டு வரலாம் என்று பேசப்பட்டு வருகிறது. இதனால் இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பும் தாமதமாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்திய முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான அஞ்சும் சோப்ரா மைக்கேல் தளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அஞ்சும் சோப்ரா பேசுகையில், சூர்யகுமார் யாதவ் முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டன் பொறுப்பை எடுத்து கொண்டார். அதற்கு காரணம் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதும், ஹர்திக் பாண்டியா காயமடைந்ததும் தான். அதற்கு முன்பாகவே ஹர்திக் பாண்டியாவை இந்திய அணி நிர்வாகம் தயார் செய்து வந்துள்ளது.
அதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு தான் கேப்டன்சி செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். எப்போதும் அணியின் துணைக் கேப்டனுக்கு புரோமோஷன் கொடுக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா தான் பொறுப்பு கேப்டனாக இருந்தவர் என்பதால், அவருக்கு மீண்டும் பொறுப்பை கொடுக்கலாம்.
ஒருவேளை ஹர்திக் பாண்டியா காயமடைந்தற்கு முன்பாகவே சூர்யகுமார் யாதவிடம் இந்திய அணி நிர்வாகம் கேப்டன்சியை கொடுத்திருந்தால், எனது ஆதரவு சூர்யகுமார் யாதவிற்கு தான் இருந்திருக்கும். ஆனால் ஹர்திக் பாண்டியாவிடம் தான் பொறுப்பை அளித்திருக்கிறார்கள். அதனால் இப்போது அவருக்கான மரியாதையை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதேபோல் இந்திய அணியில் ஏராளமான மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள்.
இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா, சுப்மன் கில் என்று ஏராளமான வீரர்கள் இருக்கின்றனர். இதில் சஞ்சு சாம்சனை கூட சேர்த்து கொள்ளலாம். இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பை அனைவரும் எந்தவித அச்சமும் இல்லாமல் எடுத்து கொண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த போட்டியை ஆரோக்கியமான விஷயமாகவே நினைப்பதாக தெரிவித்துள்ளார்.