மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வந்தார். அவர் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக், மகன் அகஸ்தியாவுடன் அதிக நேரம் காணப்பட்டார்.
அதன்பின் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்கிய போது, அவரின் மனைவி நடாஷா நேரில் வந்து ஆதரவளிக்கவில்லை. தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியாவுடன் இருக்கும் புகைப்படங்களை அழித்தார். இதனால் ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதி விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது.

இதன்பின் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. கடைசி ஓவரை சிறப்பாக வீசி ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதன்பின் வீடு திரும்பிய அவருக்கு, க்ருனால் பாண்டியா, மகன் அகஸ்தியா மற்றும் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது கூட ஹர்திக் பாண்டியாவை வரவேற்க நடாஷா வராதது, அவர்களின் பிரிவை உறுதி செய்தது. ஹர்திக் பாண்டியா இந்தியாவில் இருந்த போது, நடாஷா மும்பையிலேயே தங்கியிருந்தார். சில காலம் மகனுடன் ஹர்திக் பாண்டியா இருந்து வந்த நிலையில், தற்போது மகன் அகஸ்தியா நடாஷாவுடன் செர்பியாவிற்கு பறந்துள்ளார்.
செர்பியாவைச் சேர்ந்த நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக் சொந்த மண் திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் மகனுடன் அவர் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியாவை விட்டு நிரந்தரமாக பிரியும் முடிவை நடாஷா ஸ்டான்கோவிக் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய டி20 அணியின் கேப்டன்சி விவகாரம் ஹர்திக் பாண்டியாவிற்கு தலைவலியை கொடுத்துள்ளது.
தற்போது சொந்த வாழ்விலும் பிரச்சனையை சந்திப்பது ஹர்திக் பாண்டியாவுக்கு கூடுதல் சோகத்தை அளிப்பதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதில் இருந்து ஹர்திக் பாண்டியா சொந்த காரணங்களுக்காக விடுப்பு கேட்டுள்ளார். இதனால் விரைவில் விவாகரத்து குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.