மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீரை தேர்வு செய்தது தவறு என சுட்டிக்காட்டும் வகையில் ஒரு புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது அவர் இந்திய அணியின் இளம் பயிற்சியாளர்களில் ஒருவர் என பலரும் கூறினர். அவரது தனது 42 வது வயதில் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு முன் இந்திய அணியின் இளம் பயிற்சியாளர்கள் எப்படி செயல்பட்டு உள்ளனர் எனப் பார்த்தால் அது மோசமானதாகவே உள்ளது.
கவுதம் கம்பீரை விட இளம் வயதில் நான்கு பயிற்சியாளர்கள் இந்திய அணியுடன் பணியாற்று இருக்கின்றனர். அதில் ஒருவர் மட்டுமே வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்துள்ளார். மற்ற மூவரும் மிக மோசமான பயிற்சியாளர்கள் ஆகவே இருந்தனர். இந்த புள்ளி விவரத்தை தான் சுட்டிக்காட்டுகின்றனர் விமர்சகர்கள். இதுவரை இந்திய அணிக்கு மிக குறைந்த வயதில் பயிற்சியாளர்களாக இருந்த முதல் ஐந்து பேர் -
1. அசோக் மன்கட் (35 வயது, 1982)
2. சந்தீப் பாட்டில் (39 வயது, 1996)
3. கபில் தேவ் (40 வயது, 1999)
4. கேரி கிர்ஸ்டன் (41 வயது, 2008)
5. கவுதம் கம்பீர் (42 வயது, 2024)
இந்த ஐந்து பேரில் கவுதம் கம்பீர் தவிர்த்து மூன்று இந்திய முன்னாள் இந்திய வீரர்கள் இந்திய அணிக்கு பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர். அவர்கள் மூவரது காலகட்டத்திலும் இந்திய அணி மோசமான தோல்விகளை சந்தித்தது. அதனால், அவர்கள் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினர். அதே சமயம், வெளிநாட்டு பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டன், அப்போதைய கேப்டன் தோனியுடன் இணைந்து வெற்றிகரமான பயிற்சியாளராக இருந்தார். அதற்கு தோனியின் அமைதியான கேப்டன்சி முறையும் ஒரு முக்கிய காரணம்.

35 வயதில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அசோக் மன்கட் தலைமையில் இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல, இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணிலேயே படுதோல்வி அடைந்தது. அவர் ஒரே ஆண்டில் பதவியில் இருந்து விலகினார்.
அடுத்து 1983 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்று கொடுத்த அணியில் இடம் பெற்றிருந்த சந்தீப் பாட்டில் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தார். அவரது தலைமையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்திருந்தது. அதேபோல சிங்கர் உலக கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தகுதி பெற தவறியது. தொடர் தோல்விகளால் அவர் பதவி விலகினார்.
அடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு 1983இல் உலகக் கோப்பை வென்று கொடுத்த ஜாம்பவான் கபில் தேவ் 1999 இல் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். சச்சின் டெண்டுல்கர் அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். இரண்டு ஜாம்பவான்களும் இணைந்து இந்திய அணியை உச்சத்துக்கு கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் கூட்டணியில் இந்திய அணி எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியும், 25 ஒரு நாள் போட்டியில் 9 வெற்றிகளும் மட்டுமே பெற்றது. இதை அடுத்து கபில் தேவ் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதற்கு அடுத்து எந்த அணிக்கும் பயிற்சி அளித்திராத தென்னாப்பிரிக்க வீரர் கேரி கிர்ஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அது அதிர்ஷ்டவசமாக இந்திய அணிக்கு சரியானதாக அமைந்தது. தற்போது தனது 42 வயதில் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதில் நாம் குறிப்பிடத்தக்க விஷயம் சந்தீப் பாட்டில் மற்றும் கபில் தேவை போல ஆக்ரோஷமான குணம் கொண்டவர் கவுதம் கம்பீர்.
ஆக்ரோஷமான இருவரின் தலைமையில் இந்திய அணி மோசமாகவே விளையாடி இருக்கிறது. ஆனால், அமைதியான குணம் கொண்ட கேரி கிர்ஸ்டன் தலைமையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இருக்கிறது. இதை சுட்டிக் காட்டி ஆக்ரோஷமான குணம் கொண்ட இளம் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கேப்டன்சி இந்திய அணியை உச்சத்துக்கு கொண்டு செல்லுமா அல்லது சொதப்பலாக அமையுமா? என விமர்சகர்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.