மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது பலரை வியப்பில் ஆழ்த்தியது சுப்மன் கில்லுக்கு கொடுக்கப்பட்ட துணை கேப்டன் பதவி தான். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு தற்காலிக கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. ஆனால், இந்திய டி20 அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என கருதப்பட்டது.
ஆனால், சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமித்ததோடு துணை கேப்டன் பதவியும் ஹர்திக் பாண்டியாவுக்கு அளிக்கப்படவில்லை. சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. சுப்மன் கில்லுக்கு எப்படி துணை கேப்டன் பதவி கிடைத்தது என்பது பலருக்கும் வியப்புக்குரிய விஷயமாக இருந்தது.

அதேபோல இந்திய ஒரு நாள் அணியிலும் கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர்களை விட சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. இப்படி ஒரே நேரத்தில் இரண்டு அணிகளின் துணை கேப்டன் பதவியை சுப்மன் கில் எப்படி பெற்றார்? என்பது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கினார் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர்.
இது குறித்த அஜித் அகர்கர் பேசுகையில், "நாங்கள் எதிர்காலத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மா போன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள விரும்பவில்லை. ஹர்திக் பாண்டியா 2023 ஒரு நாள் கோப்பை உலகக் கோப்பையின் போது காயம் அடைந்தார். அவர் நேராக டி20 உலகக் கோப்பையின் போது தான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார். நல்ல வேளையாக ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக இருக்க சம்மதித்தார். அந்த சூழ்நிலை எங்களுக்கு சவாலாக அமைந்தது." என்றார்.
மேலும், "அணியின் வழக்கமான கேப்டன் இல்லாத சூழ்நிலையை தவிர்க்கவே சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் திறன் கொண்ட வீரர். அவர் இன்னும் இளம் வயதில் தான் இருக்கிறார். அவர் மூத்தவர்கள் ஆன ரோஹித் சர்மா போன்றவர்களை பார்த்து கற்றுக் கொள்வார். ரிஷப் பண்ட்டை பொறுத்தவரை அவர் ஓராண்டுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். அவர் இப்போது கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. அவருக்கு அதிக சுமையை அளிக்க நாங்கள் விரும்பவில்லை." என்றார் அஜித் அகர்கர்.