மும்பை: இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ஆகியிருக்க வேண்டிய ஹர்திக் பாண்டியா இளம் வீரர்களால் அந்த வாய்ப்பை இழந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது. இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவுக்கு கிடைக்க வேண்டிய கேப்டன் பதவி சூர்யகுமார் யாதவுக்கு எப்படி போனது? என்பதன் பின்னணி குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி அடுத்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்க உள்ளது. ஆனால், டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா ஓய்வு பெற்று விட்ட நிலையில், அடுத்து 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி யாருடைய தலைமையில் விளையாடப் போகிறது? என்ற கேள்வியை தேர்வு குழுவிடம் எழுப்பி இருக்கிறார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர். 2026 டி20 உலகக் கோப்பை அணியின் கேப்டனாக இருக்கப் போகும் வீரர் தான், இடைப்பட்ட இந்த இரண்டு ஆண்டுகளும் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என கவுதம் கம்பீர் திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.

இதை அடுத்து தேர்வு குழு மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரின் பெயரை முன் வைத்துள்ளனர். இதில் ஹர்திக் பாண்டியா வேகப் பந்துவீச்சாளராகவும் இருப்பதால் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு வருகிறது. அதனால், அவரால் சில தொடர்களில் விளையாட முடியாத நிலை ஏற்படுகிறது. அதே சமயம், ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் ஆதரவும் உள்ளது.
மறுபுறம் சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி இருந்தார். இந்த இருவரில் யாரை தேர்வு செய்வது? என முடிவெடுக்க வேண்டிய நிலையில் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு அதிரடியாக ஒரு விஷயத்தை செய்து உள்ளனர்.
அதாவது, இந்திய டி20 அணியில் இடம் பெற்று ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையில் ஆடிய சில இளம் வீரர்களிடம் அவர்கள் இருவரில் யாருடைய கேப்டன்சியில் உங்களுடைய திறமையை அதிகம் வெளிக்காட்ட முடிந்தது? யாருடைய கேப்டன்சியில் சவுகரியமாக உணர்ந்தீர்கள்? என்ற கேள்வியை முன் வைத்தனர். அதில் பெரும்பாலானவர்கள் சூர்யகுமார் யாதவ் பெயரை குறிப்பிட்டு இருக்கின்றனர்.
இதை அடுத்து கவுதம் கம்பீர், சூர்யகுமார் யாதவை இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று என் பிசிசிஐ-இடம் கூறி இருக்கிறார். இந்திய அணி வீரர்களே சூர்யகுமார் யாதவ் பெயரை கூறி விட்டதால், பிசிசிஐ வேறு வழியின்றி அவரை டி20 அணியின் கேப்டன் ஆக்க ஒப்புக்கொண்டது.
அந்த வகையில் ஹர்திக் பாண்டியா தனக்கு கிடைக்க வேண்டிய கேப்டன் பதவியை இழக்க முக்கிய காரணம் இந்திய அணியின் இளம் வீரர்கள் தான். இப்படி நடக்கும் என்று அவர் எதிர்பார்த்து இருக்கவே மாட்டார். 2024 டி20 உலகக் கோப்பை அணியில் கூட ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.