கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது. புதிய கேப்டன், புதிய பயிற்சியாளருடன் இந்திய அணி விளையாடவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இளம் வீரர் சுப்மன் கில் துணைக் கேப்டனாக பொறுப்புக்கு வந்திருப்பதால், அவரின் பேட்டிங் மீதான ஆர்வமும் உள்ளது.
ஏனென்றால் ஜிம்பாப்வே டி20 தொடரில் அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டும், மோசமாக செயல்பட்ட சுப்மன் கில்லை தேர்வு செய்ததோடு, அவருக்கு துணைக் கேப்டன் பதவியும் அளிக்கப்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியது. தற்போதைய சூழலில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் தொடக்க வீரர்களில் சுப்மன் கில் டாப் 3 இடங்களில் உள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து சுப்மன் கில் பேசுகையில், டி20 உலகக்கோப்பை சாம்பியனான இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை பெற வேண்டும். புதிய பயிற்சியாளர்களுடன் இன்னும் அதிக வெற்றிகளை பெறுவதே இலக்கு. கவுதம் கம்பீருடன் இதுவரை 2 வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். அவருடன் பணியாற்றுவது இதுவே முதல்முறை. அவருடனான உரையாடல் ஆக்கப்பூர்வமாக உள்ளது. ஒவ்வொரு வீரரும் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார்.
கவுதம் கம்பீர், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரின் மனநிலையும் ஒன்றாக உள்ளது. தென்னாப்பிரிக்கா மண்ணில் சூர்யகுமார் யாதவிற்கு கீழ் விளையாடி இருக்கிறேன். அவர்களின் புரிதல் ஒன்றாக இருப்பதால், அதன் தாக்கத்தை நிச்சயம் ரசிகர்கள் களத்திலும் உணர்வார்கள். அதேபோல் அபிஷேக் நாயர் நீண்ட நேரம் களத்தில் செலவிடுகிறார்.
வீரர்கள் அவர்களின் முன்னேற்றத்தை உணரும் வரை அவர் களத்தை விட்டு வெளியேறுவதில்லை. அது மிகவும் பாசிட்டிவான விஷயம். டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாதது நிச்சயம் ஏமாற்றம் தான். ஆனால் டி20 போட்டிகளில் எனது பேட்டிங் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது உண்மை தான்.
அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் 30 முதல் 40 போட்டிகளில் வரை விளையாடுவோம் என்று நினைக்கிறேன். அதனால் எனது கவனம் ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடுவது தான். களத்தில் ஒரு பேட்ஸ்மேனாக சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை வரும். அதுதான் பேட்டிங்கிலும், ரன் குவிப்பிலும் மாற்றத்தை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.