மும்பை: இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் கேகேஆர் அணிக்காக ஆடிய இளம் வீரர் ஹர்சித் ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆதரவால் ஹர்சித் ராணா விரைவாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். அதிலும் ஒருநாள் அணியில் இடம்பிடித்திருப்பதால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான திட்டத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடிய ஹர்சித் ராணா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணிக்காக ஆடிய ஹர்சித் ராணா 7 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளையும், விஜய் ஹசாரே தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

வழக்கமாக கவுதம் கம்பீர் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுக்கும் வீரர்களை அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது. ஏனென்றால் சுனில் நரைன், நிதிஷ் ராணா, ஸ்ரேயாஸ் ஐயர், ஆவேஷ் கான் உள்ளிட்ட பலரும் கம்பீருக்கு கீழ் உச்சம் பெற்றுள்ளனர். இதனால் இந்திய ஒருநாள் அணியில் ஹர்சித் ராணாவின் ரோல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஹர்சித் ராணா பேசுகையில், எப்போதெல்லாம் கடினமாக உழைக்க தொடங்குகிறேனோ, அப்போது காயமடைந்து பெஞ்சில் அமர வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவேன். இதனால் எனது அறையில் இருக்கும் போது புலம்புவேன். ஆனால் என் மீது எனது தந்தைக்கு ஒருபோதும் நம்பிக்கை குறைந்ததில்லை. என் வாழ்க்கையில் 3 பேருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். அதில் முதலில் எனது தந்தை பிரதீப்.
அதன்பின் எனது பயிற்சியாளர் அமித் பண்டாரி சார்.. 3வது நபர் வேறு யாருமில்லை. அது கவுதம் கம்பீர் தான். எனது ஆட்டத்தில் நடந்த மாற்றங்களுக்கு காரணம் கவுதம் கம்பீர் தான். எனது மன நிலையை மொத்தமாக கேகேஆர் ஓய்வறையில் இருந்து கொண்டே மாற்றிவிட்டார். எப்போது அவர் என்னிடம், உன் மீது நம்பிக்கை உள்ளது. உன்னால் போட்டிகளை வெல்ல முடியும் என்று கூறுவார். அழுத்தம் இருக்கும் போது கம்பீர் கொடுத்த ஒரு அட்வைஸ் நினைத்து கொள்வேன்.
அதிகபட்சமாக என்ன நடந்துவிட போகிறது. உனது பந்தில் அதிக ரன்கள் சேர்க்கப்படும், ஆட்டத்தில் தோல்வியடைவோம். அவ்வளவு தானே.. ஆனால் உனது அச்சத்தை நீ எதிர்கொள்ளவில்லை என்றால், அதனை எப்படி கடந்து முன்னேறுவாய் என்று கேள்வி கேட்டார். ஒவ்வொரு நாளும் மீண்டும் சூரியன் உதிக்கும், புதிய நாள் நமக்கானதாக இருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருந்ததாக தெரிவித்துள்ளார்.