மும்பை: இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை தவிர்த்துவிட்டு சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்ட விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக சீனியர் வீரர்கள் பலரும் விவாதித்து கொண்டிருந்த, குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா, சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக நியமித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
குஜராத் அணி உருவாக்கப்பட்ட போது, ஹர்திக் பாண்டியாவுக்கு வழிகாட்டியாக இருந்து வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றவர் நெஹ்ரா. ஏராளமான முடிவுகளை விவாதித்து எடுக்கக் கூடிய நெஹ்ரா, கேப்டனாகவும், வீரராகவும் ஹர்திக் பாண்டியாவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தவர். ஆனால் திடீரென குஜராத் அணியை விட்டு ஹர்திக் பாண்டியா வெளியேறினார்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படாதது குறித்தும், கேப்டன்சி ரோலுக்குள் சுப்மன் கில் கொண்டு வரப்பட்டது குறித்தும் நெஹ்ரா பேசி இருக்கிறார். அதில், இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கிரிக்கெட்டில் இது சாதாரண விஷயம். டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா தான் துணைக் கேப்டனாக இருந்தார்.
ஆனால் இப்போது புதிய பயிற்சியாளர்கள் பொறுப்புக்கு வந்திருக்கின்றனர். அவர்களின் பார்வை வேறாக இருக்கிறது. இதுதொடர்பாக அஜித் அகர்கர் மற்றும் கம்பீர் இருவரும் தெளிவான விளக்கத்தை அளித்துவிட்டனர். ஹர்திக் பாண்டியா தற்போது டி20ன் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு அவர் உடல்நிலை ஒத்துழைப்பதில்லை. அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கு பின் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவில்லை.
இதனால் எப்படி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க முடியும். நிச்சயம் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா முக்கிய வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஹர்திக் பாண்டியா இருக்கும் போது, 4வது வேகப்பந்துவீச்சாளராக நிச்சயம் தேர்வு செய்து கொள்ளலாம். அவர் அணிக்கு சிறந்த பேலன்ஸை கொண்டு வருகிறார். இது ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் பொருந்தாது. ஏனென்றால் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் உள்ளிட்டோரும் இந்திய அணியை வழிநடத்தி இருக்கின்றனர்.
தற்போதைய சூழலில் சுப்மன் கில் 3 வடிவங்களிலும் விளையாடி வருகிறார். இந்திய அணி நிர்வாகம் எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு செயல்படுவதாக தெரிகிறது. நிச்சயம் நாட்கள் செல்ல செல்ல சுப்மன் கில் முன்னேற்றம் காணுவார். அவரிடம் நல்ல கற்றல் பண்பு உள்ளது. மற்றவர்களின் கருத்துக்கும் அவர் எப்போதும் முக்கியத்துவம் அளிப்பார் என்று தெரிவித்துள்ளார்.