சென்னை: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்திய ஜாம்பவான்களான ஸ்ரீகாந்த், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர் பிசிசிஐ நிர்வாகத்தை விளாசியுள்ள நிலையில், இந்த வரிசையில் பத்ரிநாத்தும் இணைந்துள்ளார்.
இந்திய அணியின் தேர்வு குழு குறித்து பத்ரிநாத் பேசுகையில், இந்திய டி20 அணியின் கேப்டன்சி ஹர்திக் பாண்டியாவுக்கு செல்லும் என்ற பார்க்கப்பட்ட போது, திடீரென சூர்யகுமார் யாதவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மும்பை லாபி வேலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா மும்பையைச் சேர்ந்தவர் அல்ல.

அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ஒருநாள் தொடரில் விளையாட வேண்டுமா என்று இருந்தனர். ஆனால் கம்பீரின் கோரிக்கையால் இந்த தொடரில் விளையாடவுள்ளனர். ஒரு பக்கம் துலீப் டிராபி தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மாவை விளையாட வைக்க கம்பீர் முயற்சிப்பதாக தகவல் வெளி வந்தது. அப்படி நடந்தால், இந்திய அணியில் பூகம்பமே வெடிக்கும்.
இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டது தான். இந்திய அணியில் எப்போதெல்லாம் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதோ, அப்போதெல்லாம் மிகச்சிறப்பாக விளையாடி இருக்கிறார். உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் என்று அத்தனையிலும் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவித்துள்ளார். அவரை நீக்குவதற்கான காரணமே புரியவில்லை.
ருதுராஜ் கெய்க்வாட்-க்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவே முடியாது. டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் ஏன் இருக்கிறார் என்பதே தெரியவில்லை. விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு இருந்தது போல் இந்திய கிரிக்கெட்டில் சுப்மன் கில்லும் பிசிசிஐ-ல் ஆதரவு இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் வீரராக சுப்மன் கில்லை உருவாக்கப் போகிறார்கள். எப்போதும் டெல்லி, மும்பை அல்லது பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களை தான் பிசிசிஐ வளர்த்து வருகிறது. இத்தனை ஆண்டுகளில் ஒரு தமிழக வீரருக்கு கூட இப்படியொரு ஆதரவு கிடைக்கவில்லை. அது ஏன் என்பதே தெரியவில்லை. அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் தான்.
சில நேரங்களில் ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டவர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாத போது ஒரு கெட்டவன் இமேஜ் இருக்க வேண்டுமோ என்று தோன்றும். சில பாலிவுட் நடிகைகள் உடன் உறவில் இருக்க வேண்டும், நல்ல மீடியா மேனேஜர் இருக்க வேண்டும், உடலில் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் தோன்றுகிறது. கிரிக்கெட் விளையாடுவதோடு, இதனையும் சேர்த்து செய்ய வேண்டும் போல என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.