பாலக்கலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. முழுநேர கேப்டனாகிய பின் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளரான பின் கவுதம் கம்பீர் ஆகியோருக்கு முதல் வெற்றி இதுவாகும். இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவிற்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க, அனைவரின் பார்வையும் ரியான் பராக் பக்கமே திரும்பியுள்ளது. ஏனென்றால் யாரும் எதிர்பார்க்காதவாறு 17வது ஓவரை ரியான் பராக் கைகளில் சூர்யகுமார் யாதவ் அளித்தார். அதன்பின் மீண்டும் கடைசி ஓவரையும் வீசுவதற்கு ரியான் பராக் வந்தார். இந்திய அணிக்காக விளையாடும் 3வது போட்டியிலேயே பவுலிங்கில் 8 பந்துகள் வீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

டாப் பேட்ஸ்மேனாக மட்டுமே ரியான் பராக் இருந்து வந்த நிலையில், பவுலிங்கிலும் அசத்தலாக செயல்பட்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சூர்யகுமார் யாதவ் பேசுகையில், ஐபிஎல் தொடரில் ரியான் பராக் பவுலிங் செய்வதை நேரில் பார்த்திருக்கிறேன். அதனால் தான் ரியான் பராக்கை எக்ஸ் ஃபேக்டர் வீரர் என்று கூறுகிறோம்.
இதுபோல் பேட்ஸ்மேன்கள் சில தரமான பந்துகளை வீசி விக்கெட் எடுத்தால், ஒரு கேப்டனாக மைதானத்தில் உதவியாகவும், வெற்றியை எளிதாகவும் பெற முடியும். ஏற்கனவே இந்திய அணியில் பேட்டிங் வரிசை நீளமாக உள்ளது. அதனால் ஏதாவது ஒருநாள் ஒரு வீரர் சொதப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அந்த நாளில் மற்றவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
அதேபோல் நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை. ஒரு தலைவனாக இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரியான் பராக் பேசுகையில், பேட்டிங்கை போலவே பவுலிங் செய்யவும் விரும்புவேன். வலைப்பயிற்சியின் போதே எராளமான தகவல்களும், முக்கிய விஷயங்களும் சொல்லப்பட்டன. நான் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டால், எப்படி செயல்பட வேண்டும் என்று கூறினர்.
இதுதொடர்பாக கவுதம் கம்பீருடனும் ஆலோசனை மேற்கொண்டேன். ஆனால் சக வீரர்கள் எனக்கு சூழலை எளிதாக கொடுத்தனர். அதனால் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் பவுலிங் செய்தேன். பிட்சில் டர்ன் இருப்பதை அறிந்து பயன்படுத்தி கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.