சென்னை: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகிய 3 நட்சத்திர வீரர்களும் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தனது ஓய்வு குறித்து முகமது ஷமி விளக்கம் அளித்துள்ளார். கிரிக்கெட் எப்போது மகிழ்ச்சியை அளிக்காமல் சலிப்பை ஏற்படுத்துகிறதோ, அப்போது ஓய்வு பெறுவேன் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தனர். இளம் வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் ஓய்வு பெறுவதாகவும் மூவரும் விளக்கம் கொடுத்தனர். இதனால் ரசிகர்களின் பார்வை மற்ற சீனியர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

ஏனென்றால் முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் இன்னும் சில ஆண்டுகளில் 35 வயதை எட்டிவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பைத் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி, இதுவரை முழுமையாக மீளவில்லை. இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தனது பண்ணை வீட்டில் இருந்து ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் முகமது ஷமி பவுலிங் செய்ய தொடங்கிய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றன. இதனிடையே முகமது ஷமி ஓய்வு குறித்து பேசி இருக்கிறார். அதில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து என்னிடம் எந்த திட்டமும் தற்போது இல்லை. கிரிக்கெட் எப்போது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்காமல் சலிப்பை ஏற்படுத்துகிறதோ, அப்போது நிச்சயம் ஓய்வை அறிவித்து வெளியேறுவேன்.
இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து களம் புகுவதற்கு ஆர்வமாக இருக்கிறேன். டெஸ்ட், ஒருநாள் தொடர் மட்டுமல்லாமல் நிச்சயம் டி20 கிரிக்கெட்டையும் தொடர்ந்து விளையாடுவேன். 2026 டி20 உலகக்கோப்பை மற்றும் 2027 உலகக்கோப்பை தொடரில் ஜஸ்பிரிட் பும்ராவுடன் இணைந்து நிச்சயம் பவுலிங் செய்வேன். தற்போது எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் கிடையாது.
அதேபோல் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட ஆர்வமாக உள்ளேன். சுப்மன் கில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். குஜராத் அணி ஒட்டுமொத்தமாக மோசமாக செயல்படும் போது, கேப்டனை மட்டும் குறை சொல்லக் கூடாது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து என்சிஏ செல்லும் முகமது ஷமி, பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணிக்காக விளையாட தீவிரமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.