கொல்கத்தா: செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவின் ஹோம் சீசன் தொடங்கவுள்ளது. வங்கதேசம் அணியுடனான டெஸ்ட் தொடர், நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர், அதன்பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் என்று இந்திய அணி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதனால் சீனியர் வீரர்கள் பலரும் டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியின் மிக முக்கிய வீரரான முகமது ஷமி காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். உலகக்கோப்பைத் தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்ட முகமது ஷமி, அதன்பின் கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின் ஓய்வில் இருந்த முகமது ஷமி, சில நாட்களுக்கு முன் தனது பண்ணை வீட்டில் பவுலிங் செய்து வருவது தெரிய வந்தது.

இதனால் முகமது ஷமி விரைவில் முழு ஃபிட்னஸை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு முகமது ஷமி வந்திருந்தார். அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்ட நிலையில், இன்னொரு பக்கம் பவுலிங் பயிற்சியிலும் ஷமி ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து ஃபிட்னஸ் பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இணைந்து முகமது ஷமிக்கு பல்வேறு ஆலோசனைகளை அளித்தனர். பின்னர் மீண்டும் கொல்கத்தா சென்ற ஷமி, மருத்துவர்களின் ஆலோசனைப்படி படிப்படியாக பயிற்சியின் தீவிரத்தை அதிகரித்து வருகிறார். இந்த நிலையில் முகமது ஷமி தனது கம்பேக் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், இந்திய அணிக்காக எனது கம்பேக் எப்போது இருக்கும் என்று என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பாக நிச்சயம் பெங்கால் அணிக்காக சில ரஞ்சி போட்டிகளில் விளையாடுவேன். 2 அல்லது 3 போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் உள்ளது. அதன்பின் இந்திய அணிக்கு திரும்புவேன்.
இந்த காயம் இவ்வளவு தீவிரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் காயம் இருந்தாலும், ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னரே சிகிச்சை எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் உலகக்கோப்பையின் போதே காயத்தின் தீவிரம் தெரிந்தது. எனது காயத்தை பார்த்து மருத்துவர்களே கொஞ்சம் ஆச்சரியமடைந்தனர் என்று தெரிவித்துள்ளார்.