சென்னை: இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணியில் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா, ஒருநாள் தொடரின் போது ஓய்வு கோரியுள்ளார். இதனால் ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொடர் மூலமாக இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பொறுப்பை ஏற்கவுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய அணி 2 ஒருநாள் தொடர்களில் மட்டுமே விளையாடவுள்ளதால், கவுதம் கம்பீர் தீவிரமாக இருக்கிறார். ஏற்கனவே இந்திய டி20 அணியின் கேப்டன்சி ஹர்திக் பாண்டியாவுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் காரணமாக சொல்லப்பட்ட நிலையில், துணைக் கேப்டன் பதவியும் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சொந்த வாழ்க்கையில் சிக்கலை சந்தித்து வரும் ஹர்திக் பாண்டியா, இந்திய அணி நிர்வாகத்தால் சோகமடைந்துள்ளார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் ஹர்திக் பாண்டியாவுக்கு மற்றொரு கெடுவையும் கவுதம் கம்பீர் விதித்துள்ளது தெரிய வந்துள்ளது.
நவம்பர் மாதத்தில் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்லவுள்ளது. இந்த நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடாத வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடரில் கட்டாயம் விளையாட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அந்த தொடரின் ஃபார்மை வைத்து வீரர்களின் தேர்வு இருக்கும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியாவுடன் செல்ஃபோனில் உரையாடிய கவுதம் கம்பீர், விஜய் ஹசாரே தொடரின் பரோடா அணிக்காக விளையாடும் போது 10 ஓவர்களையும் வீசி ஃபிட்னஸை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா ஓய்வு கேட்டதற்கு அவரின் ஃபிட்னஸே காரணம் என்று தெரிய வந்துள்ளது.
இதனால் ஹர்திக் பாண்டியா விரைவில் என்சிஏ-வுக்கு வந்து ஃபிட்னஸை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா, பின்ன ஐபிஎல் தொடரில் தான் முழு ஃபிட்னஸை எட்டினார். தற்போது மீண்டும் ஒருநாள் தொடரில் ஃபிட்னஸ் காரணமாக ஓய்வு கோரியுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.