லக்னோ : உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய தூணாக மாறி இருக்கிறார்கள் பந்துவீச்சாளர்கள்.
இந்த தொடர் துவங்கும் போது இந்திய அணியின் பலமாக பேட்ஸ்மேன்கள் அறியப்பட்டனர்.
ஆனால், தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் இந்தியாவை பந்துவீச்சாளர்களே காப்பாற்றி உள்ளனர்.
லீக் சுற்றில் விராட் கோலி, ரோஹித் சர்மா அதிக ரன்கள் குவித்தது போலத் தோன்றினாலும் இந்தியா வென்ற ஆறு போட்டிகளிலும் பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் எதிரணிகளின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எதிரணிகளால் 200 ரன்களை தாண்ட முடியவில்லை. வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சில் அந்த அணிகளால் 300 ரன்களை தாண்ட முடியவில்லை. அந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா 42வது ஓவரிலும், 35வது ஓவரிலும் சேஸிங்கை முடித்து இருக்கும். அதற்கு காரணம், எதிரணிகளை சவாலான இலக்கை நிர்ணயிக்க விடாமல் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தியதே ஆகும்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கட்டத்தில் அந்த அணி 300 ரன்களை தாண்டும் நிலையில் இருந்தது. ஆனால் கடைசி ஓவர்களில் ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ் விக்கெட்களை வீழ்த்தவே அந்த அணி 273 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா அந்தப் போட்டியில் 48வது ஓவரின் முடிவில் தான் சேஸிங்கை முடித்தது. ஒருவேளை நியூசிலாந்து அணி 300 ரன்களை எட்டி இருந்தால் இந்தியாவால் அந்தப் போட்டியில் வெற்றி பெற முடியாமல் போய் இருக்கும்.
இங்கிலாந்து போட்டியிலும் வெறும் 229 ரன்கள் எடுத்து விட்டு, 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது என்பது சாதாரண விஷயம் இல்லை. என்னதான் இங்கிலாந்து அணி ஃபார்ம் அவுட் ஆகி விட்டது என்றாலும் அந்த அணிக்கு ஒரு சிறிய வாய்ப்பை கூட இந்திய பந்துவீச்சாளர்கள் கொடுக்கவில்லை.
இந்திய பந்துவீச்சாளர்களில் முக்கியமானவர்களாக இருப்பது பும்ரா, ஷமி மற்றும் குல்தீப் யாதவ். இவர்கள் மூவரும் சரியான நேரத்தில் விக்கெட்களை வீழ்த்தி போட்டி இந்தியாவின் கையில் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். ஜடேஜா, சிராஜ் ஆகியோர் இவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். சிராஜ் அதிக ரன்களை விட்டுக் கொடுப்பதே கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. அதைத் தாண்டி இந்திய அணியின் பந்துவீச்சில் எந்த குறையும் இல்லை.
இதை வைத்து பார்க்கும் போது, இந்தியா உலகக்கோப்பை வெல்வது இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கையில் தான் இருக்கிறது என்பது தெளிவாகிறது. இவர்கள் போட்டியை எளிதாக மாற்றுவதால் தான் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சில போட்டிகளில் செய்த தவறுகள் பெரிதாக தெரியவில்லை.