கொழும்பு: வங்கதேச அணியிடம் தோல்வியடைந்திருப்பதால், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் ஜாம்பவான் சோயப் அக்தர் அறிவுறுத்தியுள்ளார்.
கொழும்பு பிரேமதாஸா மைதானத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடுகின்றன. இலங்கை அணி கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. அதேபோல் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்திய பின் வங்கதேச அணியிடம் தோல்வியடைந்து இருக்கிறது.

வங்கதேச அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணியில் செய்யப்பட்ட மாற்றங்களும், ரோகித் சர்மாவின் தவறான முடிவுகளுமே காரணமாக உள்ளது. உலகக்கோப்பை அணியில் கூட இல்லாத திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்து ரோகித் சர்மா தோல்விக்கு காரணமாக அமைந்தார். இருப்பினும் அந்தப் போட்டியில் அக்சர் படேல் காயமடைந்ததால், இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் இந்திய வீரர்களை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து சோயப் அக்தர் பேசுகையில், பலம் குறைந்த அணியாக பார்க்கப்படும் வங்கதேசம் போன்ற அணியிடம் வலிமை வாய்ந்த இந்தியா அணி தோல்வியடையும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. இந்த தோல்வி இந்திய அணிக்கு ஒரு அவமானம் தான்.
அதேபோல் பாகிஸ்தான் அணியும் இலங்கை அணியிடம் வீழ்ந்திருக்கிறது. அதன் காரணமாக ஆசியக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டது. அதனைவிடவும் இது மிகப்பெரிய அவமானம். ஆனால் இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. வங்கதேச அணியுடனான தோல்வி, இந்திய வீரர்களுக்கு இதுவொரு எச்சரிக்கை மணி போன்றது தான். இலங்கை அணிக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை ஆடினால், நிச்சயம் ஆசியக் கோப்பையை வெல்ல முடியும்.
ஆனால் இலங்கை அணியும் இந்தியாவை வீழ்த்த காத்திருக்கிறது. உலகக்கோப்பை நெருங்கி வருவதால், இந்தப் போட்டி யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம். நிச்சயம் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி இரு அணிகளுக்கும் மிகக் கடினமான ஒன்றாக இருக்க போகிறது. வங்கதேசத்திடம் அடி வாங்கி இருப்பதால், இந்தியா கட்டாயம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.