துபாய்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சூப்பர் ஓவர் சென்ற ஆட்டங்கள் அனைத்திலும் வென்றிருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 5 முறை சூப்பர் ஓவர் மூலமாகவும், ஒரு பவுல் அவுட் மூலமாகவும் இந்திய அணி வென்றுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் சூப்பர் ஓவர்களின் போது புதிய உத்வேகத்துடன் விளையாடுவதாக பாராட்டி வருகின்றனர்.
ஆசியக் கோப்பைத் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் மூலமாக வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிர்கு 202 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை எடுத்ததால், ஆட்டம் டை ஆனது.

கடைசி பந்தில் இலங்கை அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவையாக இருந்த போது, ஷனகா 2 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் டை ஆன நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 2 ரன்களை மட்டுமே எடுத்ததால், இந்திய அணி முதல் பந்திலேயே 3 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலமாக இந்திய அணி சூப்பர் மூலமாக த்ரில் வெற்றியை பெற்று அசத்தி இருக்கிறது. இரு அணி வீரர்களும் சரிக்கு சமமாக போரடிய நிலையில், சூப்பர் ஓவரின் போது அழுத்தத்தை சிறப்பாக கையாண்ட இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி சூப்பர் ஓவரில் 100 சதவிகித வெற்றி கணக்கை பதிவு செய்துள்ளது.
அதாவது இதுவரை சூப்பர் ஓவர் வரை சென்ற எந்தப் போட்டியிலும் இந்திய அணி ஒருமுறை கூட தோல்வி அடைந்ததே இல்லை. 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பவுல் அவுட் முறையில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்பின் சூப்பர் ஓவர் முறையை ஐசிசி அறிமுகப்படுத்தியது.
அதன்படி 2020ஆம் ஆண்டு இந்தியா - நியூசிலாந்து அணிக்கு இடையில் ஹேமில்டனில் நடந்த போட்டி டை ஆனது. இதனால் சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. அப்போது சூப்பர் ஓவரில் இந்திய அணிக்கு 17 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி நடந்த இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் டை ஆனது. அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட போது, கேஎல் ராகுல் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து 2024ஆம் ஆண்டு இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டை ஆனது.
இந்தப் போட்டி சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், முதல் சூப்பரில் இரு அணிகளும் 16 ரன்கள் சேர்த்ததால், 2வது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அப்போது முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 11 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 1 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.
தொடர்ந்து பாலக்காலே மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. அப்போதும் இலங்கை அணி 2 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது. அப்போது முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது துபாய் மண்ணில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் டை ஆனது. இதிலும் இலங்கை அணி 2 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி முதல் பந்திலேயே வென்றுள்ளது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.