பாலக்கலே: இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், அக்சர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இந்த டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி தொடங்கியுள்ளது. பாலக்கலே மைதானம் அமைந்துள்ள பகுதியில் கனமழை பெய்து வந்ததால், திட்டமிட்டபடி 6.30 மணிக்கு டாஸ் போட முடியாமல், தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பின் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தார்பாய் அகற்றப்பட்டு, பின்னர் 7.40 மணிக்கு டாஸ் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் அசலங்கா பவுலிங் செய்வதாக அறிவித்தார். வானிலை காரணமாக சேஸிங் செய்யும் அணிக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இலங்கை அணி கேப்டன் அசலங்கா பேசுகையில், பிட்ச் கொஞ்சம் ட்ரை-யாக இருப்பதால், பவுலிங் செய்யும் முடிவுவை எடுத்துள்ளோம். பந்து கொஞ்சம் பழையதாக மாறினால், பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருக்காது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கொஞ்சம் மாற்று திட்டங்களுடன் வந்துள்ளோம். இதில் ஷனகா அமர வைக்கப்பட்டு, அவருக்கு பதிலாக விக்ரமசிங்கே சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், நாங்களும் சேஸிங் செய்யவே விரும்பினோம். ஏனென்றால் பவுலிங் செய்யும் அணியால் பந்தை கட்டுப்பாட்டுடன் வீசுவது எளிதல்ல.
இந்த போட்டியில் 4 வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரிஷப் பண்ட் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே என்ன மாதிரியான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது குறித்து பேசி இருக்கிறோம். அதன் மூலமாக ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் அடைய வேண்டும். வீரராகவும் முன்னேற்றம் காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்திய அணியில் சுப்மன் கில், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சுப்மன் கில் வந்த போது, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் அக்சர் படேல் இடத்தில் வாஷிங்டன் சுந்தரையும், அர்ஷ்தீப் சிங் இடத்தில் கலீல் அஹ்மத்தை வளர்க்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக பார்க்கப்படுகிறது.