வெற்றி அவசியம்
இந்தியா - இலங்கை அணிகள் இடையே ஆன முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இரண்டு அணிகளுமே வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முன்னிலை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கின.
டாஸ் வெற்றி
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சேஸிங் செய்ய ஏற்ற ஆடுகளம் என்பதால் அந்த முடிவை எடுத்தார் கோலி. பும்ரா நீண்ட நாட்களுக்குப் பின் காயத்தில் இருந்து மீண்டு களமிறங்கினார்.
இலங்கை பேட்டிங்
இலங்கை அணி துவக்கம் முதலே விக்கெட்களை இழந்து வந்தது. அவிஷ்கா பெர்னாண்டோ 22, குணதிலகா 20, பெரேரா 34 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் 20 ரன்களுக்கும் குறைவாகவே ரன் எடுத்தனர்.
இலங்கையின் குறைவான ஸ்கோர்
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை அணி. இந்தூர் ஆடுகளத்தில் இது குறைவான ஸ்கோர் தான். அந்த ஆடுகளத்தில் 170க்கும் மேல் அடித்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது.
பந்துவீச்சு அபாரம்
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எந்த குறையும் சொல்ல முடியாத அளவுக்கு துவக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தினர். நவ்தீப் சைனி 2, குல்தீப் யாதவ் 2, வாஷிங்க்டன் சுந்தர் 1, ஷர்துல் 3, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா சேஸிங்
143 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா சேஸிங் செய்யத் துவங்கியது. ரோஹித் சர்மா இல்லாத நிலையில், ராகுல், ஷிகர் தவான் சிறப்பான துவக்கம் அளித்தனர்.
அசத்தல் ஜோடி
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்தது. ராகுல் 32 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி இணைந்தனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி
ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடினார். முதலில் நிதானம் காட்டிய அவர் கடைசியில் அதிரடி ஆட்டம் ஆடினார். இந்தியா 30 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஆடிய போது, 16 வது ஓவரில் இரண்டு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து மிரட்டினார்.
கோலி அபாரம்
அவர் 26 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டமிழந்தார். விராட் கோலி சிறப்பாக ஆடி 17 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்தியா முன்னிலை
இந்திய அணி 17.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1 - 0 என்ற அளவில் முன்னிலை பெற்றுள்ளது.
மூன்றாவது போட்டி
முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், மூன்றாவது போட்டியில் இலங்கை வென்றால் தொடர் சமன் ஆகும். அந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே இந்தியா தொடரை வெல்ல முடியும்.