டாஸ் வென்ற இந்தியா
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்றது. டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஆடுகளத்தில் சேஸிங் செய்ய எளிதாக இருக்கும் என்பதை மனதில் வைத்து அந்த முடிவை எடுத்தார்.
பும்ரா வருகை
இந்திய அணியில் பும்ரா நீண்ட இடைவெளிக்குப் பின் இடம் பெற்றார். புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர் இல்லாத நிலையில், பும்ராவுடன் இணைந்து ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றனர்.
மைதானத்தில் மழை
டாஸ் போட்ட அடுத்த சில நிமிடங்களில் மைதானத்தில் மழை பெய்யத் துவங்கியது. அதனால், போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இடையே மழை விட்டு, அவுட் பீல்டுகளில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.
தாமதம் ஆனது
அப்போது மீண்டும் மழை பெய்ததால் போட்டி தொடர்ந்து தாமதம் ஆனது. பின் ஆடுகளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதை அறிந்து அதை காய வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன.
அயர்ன் பாக்ஸ், ஹேர் டிரையர்
ஒரு கட்டத்தில் வாக்குவம் கிளீனர் வைத்தும் காய வைக்க முடியாமல், அயர்ன் பாக்ஸ், ஹேர் டிரையர் உள்ளிட்டவை மூலம் ஆடுகளத்தை காய வைக்க முயற்சி நடந்தது.
சொதப்பல் தான் காரணம்
பிசிசிஐ மற்றும் கவுஹாத்தி மைதான நிர்வாகிகள் செய்த சொதப்பலால், ஆடுகளத்தை குறித்த நேரத்திற்குள் தயார்செய்ய முடியவில்லை. இதையடுத்து, போட்டி கைவிடப்பட்டது.
மூன்று போட்டிகள் தொடர்
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கைவிடப்பட்டுள்ளது. எனவே, அடுத்து வரும் இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை கைப்பற்ற முடியும்.