மும்பை: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஜூலை 13 மற்றும் ஜூலை 14 ஆகிய தேதிகளில் கடைசி 2 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன. இதன்பின் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் இதற்கான அட்டவணை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளன.

அதன்படி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கவுள்ளது. ஜூலை 26ஆம் தேதி நடக்கும் முதல் டி20 போட்டி பாலக்காலே மைதானத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2வது டி20 போட்டி ஜூலை 27ஆம் தேதியும், கடைசி டி20 போட்டி ஜூலை 29ஆம் தேதி பாலக்காலே மைதானத்தில் நடக்கவுள்ளது. ஆசியக் கோப்பை தொடரின் பெரும்பாலான போட்டிகள் பாலக்காலே மைதானத்தில் தான் நடத்தப்பட்டிருந்தன.
பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு சரிசமமான உதவி கிடைக்கும் என்பதால் டி20 கிரிக்கெட் தொடர் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 1ல் நடக்கும் முதல் ஒருநாள் போட்டி கொழும்பு மைதானத்திலும், ஆகஸ்ட் 4ல் நடக்கும் 2வது ஒருநாள் போட்டி கொழும்பு மைதானத்திலும் திட்டமிடப்பட்டுள்ளன.
பின்னர் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடக்கும் கடைசி ஒருநாள் போட்டி அதே கொழும்பு மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்படவுள்ளார். அதேபோல் டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் அணிக்கு கேஎல் ராகுலும் கேப்டனாக செயல்படவுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. மேலும், ஜூலை 22ஆம் தேதி இந்திய வீரர்கள் இலங்கைக்கு புறப்படவுள்ளனர்.
இதன் மூலம் கவுதம் கம்பீரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும், இந்திய அணியின் வீரர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறிய இலங்கை அணி, டி20 உலக சாம்பியனை வீழ்த்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி ரசிகர்களின் நம்பிக்கையை அந்த அணி பெறுமா என்ற கேள்வியும் உள்ளது.