பாலக்கலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இலங்கை அணி 139 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த நிலையில், அடுத்த 31 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மோசமான தோல்வியடைந்தது. இந்திய அணியின் ரியான் பராக் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் அசலங்கா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மதுஷங்கா வீசிய முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் பவுண்டரி அடிக்க, மறுபக்கன் சுப்மன் கில் 2 பவுண்டரிகளை விளாசினார். தொடர்ந்து தீக்சனா வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 14 ரன்கள் விளாசப்பட்டது.

இதன்பின் வந்த அஷிதா ஃபெர்னான்டோ பவுலிங்கில் கில் 2 பவுண்டரிகளை அடிக்க, ஜெய்ஸ்வால் ஒரு சிக்சரை விளாசினார். இதனால் 4 ஓவர்களிலேயே இந்திய அணி 51 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடிய சுப்மன் கில் பவர் பிளேவின் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று 16 பந்துகளில் 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஹசரங்கா வீசிய அடுத்த ஓவரிலேயே ஜெய்ஸ்வாலும் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் ரிஷப் பண்ட் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி இணைந்தது.
ரிஷப் பண்ட் ஷாட் விளையாட தடுமாற, மொத்த கட்டுப்பாட்டையும் சூர்யகுமார் யாதவ் எடுத்து கொண்டார். மதுஷங்கா வீசிய 8வது ஓவரில் 6,4,4 என்று 17 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 111 ரன்களாக உயர்ந்தது. பின்னர் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி, சிக்சர் என்று பறந்து கொண்டே இருக்க, சூர்யகுமார் யாதவ் வெறும் 22 ரன்களில் அரைசதத்தை எட்டினார். இவர் பதிரானாவை அட்டாக் செய்ய முயன்று 26 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதன்பின் இலங்கை அணி பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்ய, மீண்டும் பதிரானா பந்திலேயே ஹர்திக் பாண்டியா 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் மீண்டும் பதிரானா வேகத்தில் ரியான் பராக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிஷப் பண்ட் பதிரானாவை தொடர்ந்து 2 பவுண்டரிகள் அடித்து அட்டாக் செய்ய, 3வது பந்தில் போல்டாகி 49 ரன்களில் வெளியேறினார்.
கடைசி ஓவரில் ரிங்கு சிங் - அக்சர் படேல் கூட்டணி இணைந்தது. அஷிதா வீசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 20 ஓவரக்ள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது. பதிரானா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கியது. நிசாங்கா - குசால் மெண்டிஸ் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்களை குவித்த நிலையில், குசால் மெண்டிஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய நிசாங்கா 78 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது இலங்கை அணியின் ஸ்கோர் 140 ரன்களாக இருந்த நிலையில், அடுத்த 30 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தோல்வியடைந்தது. இறுதியாக 19.2 ஓவர்களில் 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.