பாலக்கலே: இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் மூலமாக அபார வெற்றியை பெற்றுள்ளது. சூப்பர் ஓவரில் இலங்கை அணி நிர்ணயித்த 3 ரன்கள் இலக்கை, இந்திய அணி ஒரே பந்தில் எட்டி, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே பந்து ஸ்லோவாக வருவதை உணர்ந்த இருவரும், அவசரம் காட்டாமல் ரன்களை சேர்த்தனர்.

ஆனால் தீக்சனாவை அட்டாக் செய்த ஜெய்ஸ்வால், அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி அசத்தினார். ஆனால் மீண்டும் ஸ்வீப் அடிக்கும் முயற்சியில் ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த ரிங்கு சிங்கும் பிட்சிற்கு மரியாதை கொடுக்காமல் பேட்டை விளாச, கண் இமைக்கும் நேரத்தில் ஒரு ரன்னில் வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினார். பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ் - சுப்மன் கில் கூட்டணி இணைந்தது. இருவரும் பிட்சை உணர்ந்து ரன்கள் சேர்த்த நிலையில், அட்டாக் செய்யும் முயற்சியில் சூர்யகுமார் யாதவும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த சிவம் துபே 13 ரன்களில் ஸ்பின்னரிடம் ஆட்டமிழந்து வெளியேற, இந்திய அணி 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
இந்த நிலையில் சுப்மன் கில் - ரியான் பராக் கூட்டணி இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது. இருவரும் இணைந்து ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய தொடங்கினர். ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரியை அடித்ததோடு, அதிகளவிலான 2 ரன்களை எடுத்து ஸ்கோரை அதிகப்படுத்தினர். அதிலும் ஹசரங்கா வீசிய 14வது ஓவரில் 2 சிக்சர்களை விளாசி ரியான் பராக் மிரட்டினார். இதனால் 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது.
அப்போது ஹசரங்கா வீசிய 16வது ஓவரில் சுப்மன் கில் 39 ரன்களிலும், ரியான் பராக் 26 ரன்களிலும் ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் வந்த வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 25 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை சேர்த்துள்ளது. இலங்கை வீரர் பதிரானா காயம் காரணமாக பவுலிங் செய்யாததால், இந்திய பேட்ஸ்மேன்கள் தப்பித்தனர்.
இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி 15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனால் கண்மூடி திறப்பதற்குள் குசால் மெண்டிஸ் 43 ரன்களிலும், ஹசரங்கா 3 ரன்களிலும், அசலங்கா டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி 12 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. ஆனால் ரிங்கு சிங் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் பவுலிங் செய்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. பின்னர் நடந்த சூப்பர் ஓவரில் இலங்கை அணி 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பின்னர் இந்திய அணி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றியை பெற்றது. இதன் மூலமாக 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.