மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் மும்பையில் ரூ.20 கோடிக்கு பங்களா ஒன்றை வாங்கியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மும்பையில் பிரத்யேகமாக கேஎல் ராகுலுக்கு வீடு இருக்கும் நிலையில், மீண்டும் முக்கியமான பகுதியில் வீடு வாங்கியிருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் முக்கிய வீரராக வலம் வருபவர் கேஎல் ராகுல். இவரும் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான ஆதியா ஷெட்டியும் 2020ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இவர்களின் காதலை இன்ஸ்டாகிராமில் வெளிப்படையாக அறிவித்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின் 2023ல் கேஎல் ராகுல் காதலியான ஆதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமண பரிசாக சுனில் ஷெட்டி மும்பையில் உள்ள ரூ.50 கோடி மதிப்பிலான பங்களாவை வழங்கினார். இவர்கள் இருவரும் அங்கு கடந்த சில ஆண்டுகளாக வசித்து வரும் சூழலில், தற்போது சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் குடியிருக்கும் பாலி ஹில் பகுதியில் கேஎல் ராகுல் ரூ.20 கோடி மதிப்பிலான பங்களா ஒன்றை வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
புதிதாக வாங்கப்பட்டுள்ள இந்த பங்களா மொத்தமாக 3,350 சதுர அடியில் அமைந்துள்ளது. இந்த பாலி ஹில் பகுதியில் ஒரு சதுர அடியின் மதிப்பு ரூ.1 லட்சம் என்று மும்பை மாநகராட்சி விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த பங்களாவை ஜூலை 15ஆம் தேதி கேஎல் ராகுல் - ஆதியா ஷெட்டி தம்பதியினர் வாங்கியுள்ளனர்.
இதற்காக முத்திரை தாள் கட்டணமாக ரூ.1.20 கோடியும், பதிவு செய்வதற்கான கட்டணமாக ரூ.30 ஆயிரத்தையும் கேஎல் ராகுல் கட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த கேஎல் ராகுல், இந்திய அணியில் இடம்பிடித்த பின் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். இந்த பங்களாவில் கேஎல் ராகுல் - ஆதியா ஷெட்டி தம்பதிக்கு மட்டும் 4 கார்களை நிறுத்திக் கொள்ளும் அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.