முடிஞ்சா என்னை கட்டுப்படுத்துங்க.. ஹாட்ரிக் அரைசதம் அடித்து சாதனை.. வெறியாட்டம் ஆடிய அபிஷேக் சர்மா!
துபாய்: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலமாக ஹாட்ரிக் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ள அபிஷேக் சர்மா, ஆசியக் கோப்பை டி20 வடிவத்தில் ஒரே தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற புதிய மைல்கல்லையும் எட்டியுள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடி வருகிறது. இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் சுப்மன் கில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

இதன்பின் முழுக்க முழுக்க அபிஷேக் சர்மா அட்டாக்கை கையில் எடுத்தார். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியும், சிக்சருமாய் விளாசிய அவர், சமீரா வீசிய ஒரே ஓவரில் 6, 4, 4 என்று பொளந்து கட்டினார். தொடர்ந்து துஷாரா வீசிய ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய அவர், 22 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி 71 ரன்களை சேர்த்தது.
சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 31 பந்துகளில் 2 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 61 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஆசியக் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா அடிக்கும் ஹாட்ரிக் அரைசதம் இதுவாகும். ஏற்கனவே பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக 24 மற்றும் 25 பந்துகளில் அரைசதம் விளாசி இருந்தார்.
தற்போது 22 பந்துகளில் அரைசதம் அடித்து சம்பவம் செய்திருக்கிறார். இதன் மூலமாக ஹாட்ரிக் அரைசதம் அடித்த 6வது இந்திய வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இவருக்கு முன்பாக விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஹாட்ரிக் அரைசதம் அடித்துள்ளனர்.
அதேபோல் டி20 வடிவத்தில் நடத்தப்பட்ட ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பாக முகமது ரிஸ்வான் 2022 எடிஷனில் 6 இன்னிங்ஸில் 281 ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்தார். ஆனால் அபிஷேக் சர்மா 6 இன்னிங்ஸில் 309 ரன்களை குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications