மும்பை : இந்தியா, இலங்கை அணிகள் மோதும் டி20, ஒருநாள் போட்டிக்கொண்ட தொடர் இம்மாதம் 27 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை இன்று தேர்வு குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்ற தகவல் வெளியானது.
ஆனால் புது பயிற்சியாளராக வந்திருக்கும் கம்பீர் பல்வேறு கண்டிஷனை போட்டு இருக்கிறார். இதில் ஒன்று கூட பிசிசிஐயால் இன்னும் நிறைவேற்ற முடியவில்லை. கம்பீர் மட்டும் பயிற்சியாளராக வந்துள்ள நிலையில் பேட்டிங் பயிற்சியாளர் யார்? பௌலிங், பில்டிங் பயிற்சியாளர்கள் யார் என்ற இன்னும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.

இது போதாது என்று கம்பீர் டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவ் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் தேர்வு குழுவில் உள்ள அஜித் அகார்கரும், பிசிசிஐ செயலாளர் ஹரிதிக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக வரவேண்டும் என்று விரும்புகின்றார். எனினும் சூரியகுமார் கடந்த தென்னாப்பிரிக்கா தொடரில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதாகவும் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கம்பீர் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த சூழலில் ஹர்திக் பாண்டியாவிடம் தாமே பேசி நிலைமையை புரிய வைப்பதாக கம்பீர் கூறியிருக்கிறார். எனினும் ஹர்திக் பாண்டியா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது. இதேபோன்று வீரர்கள் தேர்வு மற்றும் ஒரு நாள் அணியின் கேப்டன், துணை கேப்டன் போன்ற விஷயங்களிலும் கம்பீரின் தலையீடு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தேர்வுக்குழுவின் தலைவரான அஜித் அகார்கருக்கும், கம்பீருக்கும் ஈகோ மோதல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
இதன் காரணமாக ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இன்று நடைபெற இருந்த இந்திய அணியின் தேர்வு குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. இன்னும் இந்தியா இலங்கை தொடருக்கு 10 நாட்களே உள்ளன. வரும் 23ஆம் தேதி இலங்கைக்கு இந்தியா செல்ல இருப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு முடிவும் எட்டப்படாததால் இந்திய கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.