பல்லேகேலே: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் நடந்த முதல் டி20 போட்டியிலேயே இந்திய வீரர்களின் ஆட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதை கண்டு பிசிசிஐ மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வந்தார்.
சரியாக அவர் விடைபெறும் முன் 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பெற்று கொடுத்து விட்டு விடைபெற்றார். அடுத்து ஆக்ரோஷத்துக்கு பெயர் போன கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் வெற்றிக்காக "இறங்கி அடிக்க வேண்டும்" என்ற மனநிலையை கொண்டவர். இந்த நிலையில், அவர் பதவியேற்ற பின் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே இந்திய அணியின் பேட்டிங்கில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருந்தது. இந்திய டி20 அணியின் டாப் ஆர்டரில் ஒருவர் விக்கெட் வீழ்ச்சியை தடுக்க நிதான ஆட்டம் ஆடுவார். மற்றவர் அதிரடி ஆட்டம் ஆடுவார். ஆனால் அந்த முறையை கவுதம் கம்பீர் மாற்றினார்.
தற்போது சுப்மன் கில் இந்திய டி20 அணியின் துவக்க வீரராக இருக்கிறார். மற்றொரு துவக்க வீரராக ஜெய்ஸ்வால் இருக்கிறார். இந்த இருவரில் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடக் கூடியவர். சுப்மன் கில் நிதானமாக ஆடக்கூடியவர். ஆனால், இனி இந்திய டி20 அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக தான் ஆட வேண்டும் என கவுதம் கம்பீர் வலியுறுத்தி இருக்கிறார்.
அதை ஏற்று சுப்மன் கில் முதல் டி20 போட்டியில் அதிரடியாக ஆடினார். அவர் 16 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். ஜெய்ஸ்வாலை விட அவர் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியது குறிப்பிடத்தக்கது. மேலும் பவர் பிளே ஓவர்களில் இந்தியா 74 ரன்கள் சேர்த்து இருந்தது.
இந்திய அணியின் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் அதிகபட்ச பவர் பிளே ஓவர் ஸ்கோரில் இது நான்காவது இடத்தை பெற்றது. இந்த ஸ்கோர் வர காரணம் கம்பீரின் அணுகுமுறை தான் என பிசிசிஐ அதிகாரிகள் கருதுகின்றனர். கம்பீரை பயிற்சியாளராக எடுத்த தங்களின் முடிவின் வெற்றியாக இதை பார்த்து வருகின்றனர்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்தது. அடுத்த ஆடிய இலங்கை 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.