கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டை-யில் முடிவடைந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டி நாளை மீண்டும் கொழும்பு மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றிபெற்றால் தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலை உள்ளது.
இதனால் 2வது போட்டியில் இந்திய அணி முழு திறமையையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் 9 ஓவர்களில் 46 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.

இன்னொரு பக்கம் நம்பர் 4ல் பேட்ஸ்மேனாக களமிறங்கி 5 ரன்களில் ஆட்டமிழந்து வாஷிங்டன் சுந்தர் மீண்டும் சிக்கலை உருவாக்கினார். டாப் 3 பேட்ஸ்மேன்களுக்கு பின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஒரு இடதுகை பேட்ஸ்மேனை விளையாட வேண்டும் என்று உறுதியாக உள்ளனர்.
ஆனால் வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டால், இந்திய அணியின் பவுலிங்கில் பிரச்சனை வரும். ஏனென்றால் சிவம் துபேவை 10 ஓவர்களும் வீச வைக்க முடியாத நிலை உள்ளது. அதேபோல் 3வது வேகப்பந்துவீச்சாளராக சிவம் துபே இருப்பதால், அவரை நீக்குவதற்கு நிச்சயம் எந்த ஆலோசனையும் நடக்காது என்று எதிர்பார்க்கலாம்.
இதனால் ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் கொண்டு வரப்பட வேண்டும் என்றால், கேஎல் ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவரை பெஞ்ச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரியான் பராக்கை பிளேயிங் லெவனில் சேர்க்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே ஆஃப் ஸ்பின் வீசும் திறமையால் தான் ரியான் பராக் 3 டி20 போட்டிகளிலும் விளையாடி இருந்தார்.
இதனால் சிவம் துபே மற்றும் ரியான் பராக்கை வைத்து 10 ஓவர்களை வீச முடியும் என்று நம்பிக்கை இருக்கும் பட்சத்தில், வாஷிங்டன் சுந்தர் பெஞ்ச் செய்யப்படலாம். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் மற்றும் பேட்டிங் வரிசையில் இரண்டிலும் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, அக்சர் படேல், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சிவம் துபே, ரியான் பராக், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்