மும்பை: ஜிம்பாப்வே டி20 தொடருக்கு பின், இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஜூலை 27 முதல் ஜூலை 30 வரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், ஆகஸ்ட் 2 முதல் ஆக்ஸ்ட் 7 வரை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் ஆகஸ்ட் மாதத்திற்கு பின் வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது.

அதன்பின் தென்னாப்பிரிக்கா டி20 தொடர், பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் தொடர்ச்சியாக நடக்கவுள்ளது. இதனால் இலங்கை சுற்றுப்பயணத்தில் சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே உள்ளது.
ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளதால், புதிய கேப்டனாக யாருக்கு பொறுப்பு வழங்கப்படும் என்பதும், ஒருநாள் அணியை ரோகித் சர்மா இல்லாத போது யார் வழிநடத்த போகிறார்கள் என்பதும் இந்திய அணியை எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இந்திய அணியின் டி20 வடிவ கேப்டன், பின்னர் ஒருநாள் அணிக்கும் தலைமையேற்க வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ மற்றும் தேர்வு குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேஎல் ராகுலை கேப்டனாக நியமிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்கு முன் நடந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.
இதனால் சாம்பியன்ஸ் டிராபி நெருங்குவதால் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றே பார்க்கப்படுகிறது. இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அடுத்த வாரம் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்திய வீரர்களின் தேர்வின் போது புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.