IND vs SL: ஆட்டநாயகன் விருதை வெல்ல வாய்ப்பிருக்கு.. ஜடேஜாவின் மேம்படுத்த வெர்சன் தான் இவர்-சோப்ரா
மும்பை: இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் ஆசிய ஆடுகளங்களில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார் என்றும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமில்லாத ஆடுகளங்களிலும் அவர் அணியின் திட்டங்களில் இருக்கக்கூடும் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜாவின் upgraded version தான் மானவ் சுதர் திகழ்கிறார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலேயில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை அன்று, சுதர் 21.4 ஓவர்களில் 76 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இவரது இந்த சிறப்பான பந்துவீச்சு, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 462 ரன்களுக்கு எதிராக, இலங்கை அணியை 284 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்ய உதவியது. தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, 'ஆசிய ஆடுகளங்களில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக மானவ் சுதர் தனது இடத்தை உறுதி செய்துவிட்டாரோ?' என்ற கேள்விக்கு ஆகாஷ் சோப்ரா பதிலளித்தார்.
அதற்கு அவர், "நான் ஆம் என்றுதான் கூறுவேன், ஏனென்றால் அவர் மிகவும் திறமையான ஒரு பந்துவீச்சாளர். அவர் பந்தை வீசும்போது, அது காற்றில் நகர்ந்து , பவுன்ஸ் ஆகி, திரும்புகிறது. எதிரணி பேட்ஸ்மேன்கள் தற்காப்பு ஆட்டத்தை விளையாடும்போது கூட அவர் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். பேட்ஸ்மேன்கள் தற்காத்து விளையாடும்போது கூட அவர்களை திணறடிப்பது, இந்த வீரரிடம் இருக்கும் பெரும் திறமையைக் காட்டுகிறது" என்று சோப்ரா பதிலளித்தார்.
"அவர் பந்துவீசுவதோடு மட்டுமின்றி நன்றாக பேட்டிங்கும் செய்கிறார், இதன் மூலம் வெளிநாட்டு ஆடுகளங்களிலும் அவரை அணியில் சேர்ப்பது குறித்து நாம் பரிசீலிக்கலாம். ரவீந்திர ஜடேஜாவின் வாரிசாக நான் இவரைப் பார்க்கிறேன். ஏனெனில் ஜடேஜா ஒரு கட்டத்திற்குப் பிறகு ஓய்வு பெறும்போது, நமக்கு அவரைப் போன்ற ஒரு இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் தேவைப்படுவார். பந்துவீச்சாளராக மட்டும் பார்த்தால், ஜடேஜாவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகத்தான் நான் மானவ் சுதரை பார்க்கிறேன்" என்று கூறினார்.
"சுதர் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், ஆனால் தான் ஒரு சிறந்த வீரர் என்பதை அவர் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அவர் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்க நகரிலிருந்து வருகிறார். அது கிரிக்கெட்டுக்கு மிகவும் பிரபலமான ஒரு இடம் அல்ல. இருப்பினும், அங்கிருந்து வந்து நீண்ட வடிவ கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி, துலீப் டிராபி, இந்தியா ஏ, பின்னர் இந்திய அணி என தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல. அதோடு தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதையும் வென்றார்," என்று அவர் கூறினார்.
"அவர் ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் அவர் ஐந்து அல்லது ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்த டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் போட்டியை வெல்ல 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும், அதில் ஒட்டுமொத்தமாக சுமார் 10 விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரரே இப்போட்டியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார்" என்று சோப்ரா கூறினார்.
மானவ் சுதர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, இந்தியா விளையாடிய ஒரே இன்னிங்ஸில் முக்கியமான 28 ரன்களையும் எடுத்திருந்தார்.


Click it and Unblock the Notifications

