மும்பை: ஒரு நாள் போட்டி உலகக் கோப்பைகளிலேயே அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற மிகப்பெரிய சாதனையை படைத்திருப்பவர் முகமது ஷமி. ஆனால், அவருக்கு கடந்த இரண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பைகளிலும் முழுமையாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதுதான் சோகம். இந்த நிலையில், 2019 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி தனக்கு எதிராக செயல்பட்டதை பற்றி கூறி அதிர வைத்து இருக்கிறார் முகமது ஷமி.
மேலும், தான் சிறப்பாக செயல்பட்ட போதும் அணியில் தேர்வு செய்யாத நிலையில் இந்திய அணி அரை இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டி இருக்கிறார். இதன் மூலம் 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியின் அரை இறுதி தோல்விக்கு காரணமே அணி தேர்வில் சொதப்பிய ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி தான் என மறைமுகமாக குற்றம் சுமத்தி இருக்கிறார். என்ன சொன்னார் முகமது ஷமி?

2019 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இந்திய அணியின் முதல் நான்கு குரூப் போட்டிகளில் முகமது ஷமிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதன் பின்னரே அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
மொத்தமாக, அந்த உலகக் கோப்பையில் அவர் நான்கு போட்டிகளில் 14 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ஆனால், குரூப் சுற்றில் கடைசி போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அவரை களம் இறக்கவில்லை. அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அது குறித்து பேசிய முகமது ஷமி, "2019 உலகக் கோப்பையில் நான் குரூப் சுற்றில் முதல் நான்கு அல்லது ஐந்து போட்டிகளில் விளையாடவில்லை. அதற்கு அடுத்த போட்டியில் விளையாடினேன். ஹாட்ரிக் விக்கெட் எடுத்தேன். அதன் பின் ஐந்து விக்கெட் வீழ்த்தினேன். அதற்கடுத்த போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்தினேன். 2023லும் அதே போல தான் நடந்தது. முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. அதன் பின் ஐந்து விக்கெட், நான்கு விக்கெட் மற்றும் ஐந்து விக்கெட் வீழ்த்தினேன்." என்றார்.
மேலும், "ஒவ்வொரு அணியிலும் நன்றாக விளையாடும் வீரர்கள் தான் தேவை என நினைப்பார்கள். நான் 2019 உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தி இருந்தேன். இதை விட நான் என்ன செய்ய வேண்டும்? என்னிடம் கேள்விகளும் இல்லை. பதில்களும் இல்லை. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நான் என்னை நிரூபித்துக் கொண்டே இருப்பேன். எனக்கு நீங்கள் வாய்ப்பு அளித்தீர்கள். நான் மூன்று போட்டியில் 13 விக்கெட்களை வீழ்த்தேன். ஆனால், அதன் பின் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்தோம். மொத்தம் நான்கு போட்டிகளில் நான் 14 விக்கெட்களை வீழ்த்தி இருந்தேன். 2023 உலகக் கோப்பையிலும் ஏழு போட்டிகளில் 24 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறேன்" என்றார் ஷமி.
இதன் மூலம் அவர் மறைமுகமாக 2019 உலகக் கோப்பையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி தன்னை அணியில் தேர்வு செய்யாததால் தான் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது என மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.