முகமது ஷமி எடுத்த முடிவு.. பதறி அடித்து காப்பாற்றிய நண்பர்.. மேட்ச் பிக்ஸிங் புகாரால் வந்த வினை
மும்பை: சில ஆண்டுகளுக்கு முன் முகமது ஷமி மோசமான மனநிலையில் இருந்தபோது ஒரு முறை அதிகாலை 4 மணிக்கு 19 வது மாடியில் உள்ள பால்கனியின் முனையில் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது தான் அவரது நிலையை உணர்ந்து காப்பாற்றியதாகவும் கூறி இருக்கிறார் அவரது நண்பரும், உத்தரகாண்ட் எம்எல்ஏ-வும் ஆன உமேஷ் குமார்.
2017-18 காலகட்டத்தில் முகமது ஷமி, அவரது மனைவியால் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் மீது தனிப்பட்ட முறையில் பல்வேறு புகார்களை கூறிய அவரது மனைவி ஹாசின் ஜஹான், அவர் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும் புகார் கூறி இருந்தார். ஒருமுறை பாகிஸ்தான் அணிக்கு எதிராக முகமது ஷமி மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

அதனால், தான் மனம் உடைந்து போனதாக ஏற்கனவே பல பேட்டிகளில் முகமது ஷமி கூறி இருக்கிறார். தான் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்ததாகவும் அவர் கூறி இருக்கிறார். தற்போது அவரது நண்பர் உமேஷ் குமார் உண்மையில் முகமது ஷமி அப்போது என்ன தவறான முடிவை எடுத்தார்? அந்த இரவு என்ன நடந்தது? என ஒரு பேட்டியில் விவரித்து இருக்கிறார்.
உமேஷ் குமார் பேசியதாவது - "அப்போது முகமது ஷமி அனைத்து விதத்திலும் தனது மோசமான நிலையில் இருந்து வெளியேற போராடிக் கொண்டிருந்தார். அப்போது என் வீட்டில் தான் அவர் தங்கி இருந்தார். அப்போதுதான் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக மேட்ச் ஃபிக்ஸிங் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த நாளின் இரவில் அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர் மனம் உடைந்து போனார். அப்போது அவர், "நான் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வேன். ஆனால், எனது நாட்டுக்கு நான் துரோகம் செய்ததாக சொல்வதை என்னால் தாங்க முடியாது" என்றார்."
"அதன் பின் அந்த செய்தி தொலைக்காட்சியிலும் வந்தது. அந்த நாளின் இரவில் அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தார். அன்று அதிகாலை 4 மணிக்கு நான் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்து சமையலறைக்கு சென்றேன். அங்கே நான் நின்று கொண்டிருந்தபோது, ஷமி பால்கனியின் முனையில் நின்று இருப்பதை பார்த்தேன். நாங்கள் 19வது மாடியில் வசித்துக் கொண்டிருந்தோம். அப்போது என்ன நடந்திருக்கும் என்பதை நான் ஊகித்தேன். அன்றைய இரவு தான் முகமது ஷமியின் கிரிக்கெட் வாழ்வின் மிக நீண்ட இரவு."
"அதன் பின் ஒரு நாள் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு மெசேஜ் வந்தது. அப்போது விசாரணை கமிட்டி அவர் மீது எந்த குற்றமும் இல்லை என முடிவெடுத்திருப்பதாக அதில் தகவல் இடம் பெற்று இருந்தது. அப்போது ஷமி உலகக் கோப்பையை வென்றது போல மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்." இவ்வாறு உமேஷ் குமார் கூறினார்.


Click it and Unblock the Notifications