கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இலங்கை அணி சார்பில் ஹசரங்கா காயம் காரணமாக விலகிய நிலையில், இளம் வீரர் ஷிராஸ் நீக்கப்பட்டார்.
அவர்களுக்கு பதிலாக கமிண்டு மெண்டிஸ் மற்றும் வாண்டர்சே சேர்க்கப்பட்டனர். இந்திய அணி தரப்பில் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்பின் இலங்கை அணி தரப்பில் ஃபார்மில் உள்ள நிசாங்கா - குசால் மெண்டிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மறுபக்கம் இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை வீச சிராஜ் அழைக்கப்பட்டார்.

எப்போதும் இலங்கை அணிக்கு எதிரான போட்டி என்றாலே சிராஜ் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஏனென்றால் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் சிராஜ் செய்த சம்பவத்தை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அதேபோல் மீண்டும் உலகக்கோப்பை தொடரிலும் சிராஜ் தரமான சம்பவத்தை இலங்கை அணிக்கு எதிராக செய்திருந்தார்.
இந்த நிலையில் முதல் பந்தை எதிர்கொள்ள நிசாங்கா தயாராக இருந்த நிலையில், சிராஜ் முதல் பந்தை வீசினார். அந்த பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் உள்ள லைனில் பிட்சாகி, பந்து இன்ஸ்விங்கானது. அதனை தடுக்க நிசாங்கா நிதானமாக பேட்டை வெளியில் வைத்த போது, அது எட்ஜாகி விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலின் கைகளுக்கு சென்று விழுந்தது.
இதன் மூலமாக முதல் பந்திலேயே இலங்கை அணியின் முக்கியமான பேட்ஸ்மேனான நிசாங்காவை வீழ்த்தி சிராஜ் சம்பவம் செய்தார். அந்த ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல், சிராஜ் மெய்டன் ஓவராக வீசி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி சிறப்பாக தொடங்கி அசத்தியுள்ளது. பின்னர் வந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் கூட்டணி சிராஜ் பவுலிங்கை நிதானமாக எதிர்கொண்டு வருகின்றனர்.