சென்னை: உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் கால்களில் காயம் ஏற்பட்டது. காயத்தையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நாளும் ஊசிகளை போட்டுக் கொண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பின் ஓய்வில் இருந்த அவர், லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
இதனால் ஊன்றுகோல் உதவியுடன் தான் முகமது ஷமி நடக்க தொடங்கினார். பின்னர் காயம் சிறிதளவு குணமடைந்த சூழலில், தற்போது பவுலிங் செய்ய தொடங்கியுள்ளார். கிட்டத்தட்ட 8 மாதங்களாக ஓய்வில் இருக்கும் முகமது ஷமி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபியில் களமிறங்கும் நோக்கில் தீவிரமாக தயாராகி வருகிறார்.

இதனிடையே சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், ரசிகர்களிடையே ஓய்வு குறித்த விவாதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து யூட்யூப் சேனல் ஒன்றுக்கு முகமது ஷமி அளித்துள்ள பேட்டியில், ஒருமுறை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் ஓய்வு குறித்து பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் எது என்று நேரடியாக கேள்வி எழுப்பிவிட்டேன். அதற்கு தோனி, கிரிக்கெட் விளையாடி உனக்கு சலிப்பு ஏற்படும் போது ஓய்வு பெற்றுவிடலாம். அதேபோல் கிரிக்கெட்டால் உனக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை என்றாலும் ஓய்வுபெறலாம். அதேபோல் இந்திய அணியில் இருந்து தூக்கியெறியப்படுவோம் என்று உணர்ந்தால், ஓய்வுபெற்றுவிடலாம் என்று கூறினார்.
நான் இப்போது 33 வயதை எட்டியுள்ளேன். 2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. அதேபோல் 2027ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. அப்போது இந்திய அணியில் பும்ராவுடன் இணைந்து நிச்சயம் பவுலிங் செய்வேன். அதனால் ஓய்வு பெறும் எண்ணமே இப்போது எனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பண்ணை வீட்டில் பவுலிங் பயிற்சியை முகமது ஷமி தொடங்கியுள்ள நிலையில், விரைவில் என்சிஏ-வுக்கு பயணிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. என்சிஏவில் குறைந்தது 2 மாதங்களாவது முகமது ஷமி பயிற்சி பெற்றால், செப்டம்பர் இறுதிக்குள் தயாராகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை மட்டும் ஷமி மிஸ் செய்ய வாய்ப்புகள் உள்ளது.