மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியுடனான நட்பு குறித்து இந்திய ஜாம்பவான் தோனி கூறியுள்ள கருத்து சோசியல் மீடியாவொல் ட்ரெண்டாகி வருகிறது. தாங்கள் இருவரும் அடிக்கடி சந்திக்கவில்லை என்றாலும், நேரில் சந்தித்து கொண்டால் நிச்சயம் சில நிமிடங்கள் பேசிக் கொள்வோம் என்றும் தோனி கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன்பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின் இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி களமிறங்கியுள்ளார்.

இன்னும் பழைய ஃபார்முக்கு வரவில்லை என்றாலும், அடுத்தடுத்து போட்டிகளில் விராட் கோலியின் விஸ்வரூபத்தை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இந்த நிலையில் விராட் கோலி குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி பேசியுள்ள கருத்துக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
அதில், எனக்கு சொந்த வாழ்க்கையில் செல்ஃபோன் மற்றும் சோசியல் மீடியாவை அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் கிடையாது. நாங்கள் இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் இணைந்து விளையாடி இருக்கிறோம். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். நாங்கள் வழக்கமாக எப்போது சந்தித்து கொண்டதில்லை. எப்போதாவது சூழல் எங்களை இணைத்தால் தான் பேசிக் கொள்வோம்.
ஆனால் நேரில் சந்தித்து கொள்ளும் போதெல்லாம், நாங்கள் இருவரும் ஒருபுறம் ஒதுங்கி நிச்சயம் சில விஷயங்கள் பேசுவோம். வழக்கமாக வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதாக தான் எங்களின் உரையாடல் இருக்கும். அதேபோல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விராட் கோலியின் பேட்டிங் செய்வது சுவாரஸ்யமாக இருக்கும்.
ஏனென்றால் நாங்கள் பேட்டிங் செய்யும் போது 2 மற்றும் 3 ரன்களை அதிகமாக ஓடி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் போது ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்தது. அப்போது ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்காமல் தோனி ஓய்வறைக்கு சென்ற போது, அவரை தேடி சிஎஸ்கே ஓய்வறைக்கே சென்று விராட் கோலி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.