மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் இருக்க வேண்டும் என்பதில் அந்த அணியின் உரிமையாளர்களான அம்பானி குடும்பத்தினர் உறுதியாக உள்ளனர். அந்த திட்டத்தை உடைக்கும் வகையில் ஒரு முடிவை எடுத்திருக்கிறார் கவுதம் கம்பீர். அவரது முடிவால் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விரிசல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. அந்த இடைவெளியில் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டார். அவர் தான் அடுத்த இந்திய டி20 அணி கேப்டன் எனவும் நம்பப்பட்டது. இந்திய அணியின் கேப்டன் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அந்த அணியின் உரிமையாளர்கள் அடுத்த டி20 அணி கேப்டன் என கூறப்பட்ட ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து தங்கள் அணிக்கு இழுத்தனர்.

இந்திய ஒரு நாள் அணி மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் தங்கள் அணியில் 10 ஆண்டுகள் கேப்டன் ஆக செயல்பட்ட ரோஹித் சர்மாவை அதிரடியாக நீக்கிவிட்டு வருங்கால இந்திய டி20 அணியின் கேப்டனாக கருதப்பட்ட ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ரோஹித் சர்மா அதிரடியாக 2024 டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்று அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு, டி20 உலகக்கோப்பையையும் வென்று கொடுத்தார். ஹர்திக் பாண்டியா தலைமையில் தான் இந்திய டி20 அணி உலகக் கோப்பையில் பங்கேற்கும் என மும்பை இந்தியன்ஸ் போட்ட கணக்கு பொய்யானது.
மேலும், மூத்தவரான ரோஹித் சர்மா இருக்கும்போது இளையவரான ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்கியது மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பல வீரர்களும் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக நின்றனர். அதனால், அந்த அணியில் ஒற்றுமை இல்லாத நிலை ஏற்பட்டது. அதனாலயே 2024 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக செயல்பட்டு அந்த தொடரின் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது மும்பை இந்தியன்ஸ். தற்போது ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
இப்போது நிச்சயமாக ஹர்திக் பாண்டியா தான் இந்திய டி20 அணியின் கேப்டன் என அனைவருமே எண்ணினர். அதனால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் சற்று நிம்மதி அடைந்திருந்தது. இனி தங்கள் அணியில் இருக்கும் விரிசல்கள் முடிவுக்கு வரும் என அவர்கள் கருதினர். மேலும், தங்களின் ஆசைப்படி இந்திய டி20 அணியின் கேப்டனே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் இருப்பார் என எண்ணினர்.
ஆனால், அதற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டை ஒன்றை போட்டு இருக்கிறார் கவுதம் கம்பீர். அவர் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதிரடி முடிவாக இந்திய டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமிக்க இருக்கிறார், சூர்யகுமார் யாதவும் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்தவர் தான். ஆனால் 2024 ஐபிஎல் தொடரைப் போன்றே ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த மற்றொரு வீரர் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார்.
அதனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் வீரர்கள் இந்திய அணி கேப்டன் பக்கம் நிற்பார்கள். அதனால், மீண்டும் மும்பை அணியில் சலசலப்பு ஏற்படும். ஹர்திக் பாண்டியாவின் முடிவுகளை அனைவரும் ஏற்பார்களா? என்பது சந்தேகமே. அதனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்த ஆண்டும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் அம்பானி குடும்பத்தின் திட்டத்திற்கு ஆப்பு வைத்து இருக்கிறார் கவுதம் கம்பீர்.