கொழும்பு: இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உடனான உறவு எப்போதும் ஸ்பெஷலானது என்று டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். கேகேஆர் அணிக்காக முதல்முறையாக விளையாடுவதற்கு கவுதம் கம்பீர் தான் வாய்ப்பு கொடுத்ததாக கூறியுள்ள அவர், தனது அணுகுமுறை குறித்து நன்றாக அறிவார் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி நாளை விளையாடவுள்ளது. இந்திய அணி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ், புதிய பயணத்தை தொடங்கவுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டனாக வருவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அந்த பொறுப்புக்கு வந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முக்கிய காரணம் என்று பார்க்கப்படுகிரது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்குவது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், வெற்றி வரும் போதும், தோல்வியின் போது எவ்வளவு நிதானமாக இருக்க வேண்டும் என்பதை இந்த விளையாட்டு மூலமாக கற்றுக் கொண்டேன்.
மைதானத்தில் என்ன சாதனைகள் செய்தாலும், எவ்வளவு சொதப்பலாக விளையாடினாலும் அதனை மைதானத்துடன் விட்டுவிட்டு வர வேண்டும். எப்போதும் கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பது மனதில் இருக்கும். ஏனென்றால் வாழ்வின் ஒரு பகுதி தான் கிரிக்கெட்டாக இருக்கிறது. சிறப்பாக விளையாடும் போது உச்சத்தில் இருக்கலாம் என்றும், மோசமான விளையாடும் போது கீழ்நிலைக்கு செல்வோம் என்று எடுத்துக் கொள்ள தேவையில்லை.
நல்ல மனிதனாக இருக்கும் போது, வாழ்வில் அனைத்தும் நன்றாக நடக்கும். அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர் உடனான உறவு எப்போதும் ஸ்பெஷலானது. கேகேஆர் அணிக்காக விளையாடிய போது, கவுதம் கம்பீர் கேப்டன்சியில் தான் முதல்முறையாக வாய்ப்பு கிடைத்தது. நான் எப்படி சிந்திப்பேன், எனது அணுகுமுறை எப்படி இருக்கும் என்பது அவருக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
கேகேஆர் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் இருந்த போது, சூர்யகுமார் யாதவிற்கு துணைக் கேப்டன் பதவியை கொடுத்தார். ரோஹித் சர்மாவுக்கு முன்னதாகவே சூர்யகுமார் யாதவின் திறமையை அறிந்து பயன்படுத்தியவர் கவுதம் கம்பீர். இதனால் கவுதம் கம்பீர் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.