மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது தலைச் சிறந்த ஆல் ரவுண்டர் என்றால் அது ஹர்திக் பாண்டியா தான்ம் ஹர்திக் பாண்டியா இடத்திற்கு சிவம் துபே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா தமது இடத்தை யாராலும் அசைக்க முடியாது என்பதை டி20 உலகக்கோப்பை தொடரில் காண்பித்து விட்டார்.
இந்த சூழலில் ஹர்திக் பாண்டியா தமக்கு கேப்டன் பதவி வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறார். ஆனால் கௌதம் கம்பீர், சூர்யகுமார் யாதவுக்கு தான் அந்த பதவியை கொடுக்க வேண்டும் என கூறி வருகிறார். இந்த சூழ்நிலையில் ஹரிதிக் பாண்டியாவின் பணியை செய்வதற்காகத்தான் உழைத்து வருவதாக கூறியிருக்கிறார் 21 வயதான நிதிஷ்குமார்.

நிதிஷ் குமார் ரெட்டி ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக கடந்த சீசனில் விளையாடி பேட்டிங்கில் 303 ரன்கள் குவித்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 142 ஆக இருந்தது. ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதையும் நிதிஷ் குமார் ரெட்டி பெற்றார். இந்த சூழலில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் நிதிஷ்குமார் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதிஷ் குமார் ரெட்டி, பேட்டிங் வரிசையில் நம்பர் 6 அல்லது 7வது இடத்தில் விளையாட எனக்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றேன். இன்னும் சொல்லப்போனால் அது ஹர்திக் பாண்டியாவின் பணி. அதுபோன்ற வேலையை தான் செய்வதற்காக தயாராகி வருகின்றேன். கீழ் வரிசை மட்டுமல்ல நீங்கள் என்னை பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் இறக்கினாலும் நான் அதை செய்வேன்.
தொடக்க வீரராக இருந்தாலும் சரி, இல்லை நடுவரிசையாக இருந்தாலும் சரி வாய்ப்புக்காக தான் நான் காத்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் டாப் வரிசையில் ஏற்கனவே பல அனுபவ வீரர்கள் இருப்பதால் அங்கு எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கின்றேன். நீங்கள் எனக்கு எந்த ரோல் வழங்கினாலும் அதற்கு ஏற்ற வகையில் விளையாடுவதற்காக நான் இப்போது இருந்தே பயிற்சி செய்து வருகின்றேன்.
தற்போது ரோகித் சர்மா, விராட் கோலி ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றிருப்பதால் இளம் வீரர்களான எங்களுக்கு அதிக அளவுக்கு வாய்ப்பு வரும் என்று நினைக்கிறேன். அதனை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்னுடைய உத்வேகமே விராட் கோலி தான். விராட் கோலி போல் நானும் பூமா நிறுவனத்தால் ஸ்பான்சருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என நிதிஷ்குமார் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் நிதிஷ் குமார் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.