கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 - 0 என்ற அளவில் தோல்வி அடைந்து இருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி டை ஆன நிலையில், அடுத்த போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்திலும், மூன்றாவது போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா தோல்வி அடைந்து இருந்தது.
இந்த நிலையில், இலங்கை அணியின் ஆஃப் ஸ்பின்னர் மகீஷ் தீக்ஷனா இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை சூசகமாக சுட்டி காட்டி இருக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில், "இந்திய வீரர்கள் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்களிலும், சிறிய பவுண்டரி எல்லைகளைக் கொண்ட மைதானங்களிலும் விளையாடுவார்கள். அதனால், அவர்கள் ஒருநாள் தொடர் நடந்த கொழும்பு மைதானத்தில் சுழற் பந்துவீச்சில் தடுமாறுவார்கள் என்பதால் நாங்கள் அதை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தோம்" எனக் கூறி இருக்கிறார்.

இதன் மூலம் பிசிசிஐ கடந்த சில ஆண்டுகளாக செய்து வரும் ஒரு தவறை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார். இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அதிக பார்வையாளர்களை பெற வேண்டும் என்பதற்காக போட்டிகளை சுவாரசியப்படுத்த வேண்டி இந்தியாவில் இருக்கும் அனைத்து முக்கிய மைதானங்களின் பவுண்டரி எல்லைகளும் சுருக்கப்பட்டுள்ளன.
அதனால், மிக எளிதாக ஃபோர் மற்றும் சிக்ஸ் அடிக்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சிக்ஸர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு சான்றாகும். மேலும் அதிக விளம்பர வருவாய் வேண்டுமென்றால் ஒவ்வொரு போட்டியும் முழுமையாக நடைபெற வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு ஓவருக்கும் இடையில் விளம்பரங்களை ஒளிபரப்பி அதிக வருவாய் ஈட்ட முடியும்.
அதற்கு எந்த ஒரு அணியும் குறிப்பிட்ட 20 ஓவர் அல்லது 50 ஓவர்களுக்குள் ஆல் - அவுட் ஆகக்கூடாது. அதற்கு பிட்ச் சற்று பேட்டிங் செய்ய சாதகமாக இருக்க வேண்டும். அதனாலேயே இந்தியாவில் அனைத்து பிட்ச்களும் எப்போதும் பேட்டிங்கிற்கு அதிக சாதகமாக தயாரிக்கப்படுகிறது. அதனால், பந்துவீச்சு திட்டத்தில் பந்தை திருப்பி வீசும் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இது இந்திய பேட்ஸ்மேன்கள் மனதில், ஸ்பின்னர்களை எளிதாக தாக்கி ஆடலாம் என்ற ஒரு சொகுசான எண்ணத்தை உருவாக்கி விட்டது.
அதே எண்ணத்தில் அவர்கள் வெளிநாடுகளில் விளையாடும் போது அது பெரிய அளவில் பலன் அளிப்பது இல்லை. இலங்கையில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்களே அதிகம். குறிப்பாக ஒரு நாள் தொடர் நடைபெற்ற கொழும்பு மைதானம் முற்றிலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.
அதில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். முதல் போட்டியில் இருந்து மூன்றாவது போட்டி வரை அவர்களின் பேட்டிங் திறன் சரிந்து கொண்டே சென்றது. அதற்கு முக்கிய காரணம் இந்தியாவிலுள்ள மைதானங்கள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இல்லாதது தான். இனியாவது பிசிசிஐ, பேட்டிங் செய்ய சாதகமான பிட்ச்களை மட்டும் தயாரிப்பதை கைவிட்டு, அனைத்து விதமான பிட்ச்களையும் தயாரிக்க முன்வர வேண்டும். மேலும், சில மைதானங்களிலாவது பவுண்டரி எல்லைகளின் தூரத்தை அதிகரிக்க வேண்டும்.