கொழும்பு : இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு தொடரை இழந்து இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி பூஜ்ஜியத்துக்கு இரண்டு என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இந்த தொடரில் முதல் முறையாக பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ள கம்பீருக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் இந்த தொடரில் இருந்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது.

பந்துவீச்சில் இந்த தொடரில் இந்தியா சொதப்பியது என்று சொன்னால் பேட்டிங்கில் மிகவும் மோசமாக விளையாடியது. இலங்கை அணி விக்கெட்டுகளை முதலில் அடுத்தடுத்து எடுத்தாலும் கடைசி மூன்று வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் இந்தியா தடுமாறியது. இதேபோன்று பேட்டிங்கில் ரோகித் சர்மாவை தவிர மற்ற வீரர்கள் யாரும் விளையாடவில்லை.
இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஜூனைத் கான் இந்தியாவை கிண்டல் அடித்திருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பும்ரா இல்லாமல் இந்திய அணியின் பந்துவீச்சு ஜீரோவாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும் தாம் சொல்வதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பலரும் நீங்கள் சொல்வது சரிதான் பும்ரா போன்ற ஒரு வீரர் இல்லாமல் இந்தியா தடுமாறி வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த t20 உலக கோப்பையில் பும்ரா 15 விக்கெட் களை வீழ்த்தி அசத்தினார்.
இந்த நிலையில் அவருக்கு பதிலாக முஹம்மது சிராஜ், ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் இந்த தொடரில் விளையாடினர். அதிலும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆர்ஸ்தீப் சிங் இடம்பெறவில்லை. குறிப்பாக இந்திய அணி பிளேயிங் லெவன் தேர்வு செய்த விதம்தான் தோல்விக்கு காரணம் என்று பலரும் கம்பீரை சாடி வருகின்றனர்.