இலங்கைக்கு எதிரான பிங்பால் டெஸ்ட் - ரன் சேர்க்க திணறும் இந்தியா.. ரோகித், கோலி அடுத்தடுத்து அவுட்
பெங்களூரு : இலங்கைக்கு எதிரான 2வது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆடுகளம் காய்ந்த நிலையில் இருப்பதால், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படுகிறது. மேலும் பிங்க் நிற பந்தும், பேட்டிற்கு சரியாக வரவில்லை.
இதனால் ரன் சேர்க்க இந்திய அணி வீரர்கள் தடுமாறி வருகின்றனர். தொடக்க வீரராக ரோகித் , மாயங் அகர்வால் களமிறங்கினர்.

திணறல்
மாயங் அகர்வால் 4 ரன்களில் மோசமான ரன் அவுட்டில் சிக்கி ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா முதல் சில ஓவர்களில் அதிரடியாக விளையாடினார். ஆனால் சுழற்பந்துவீச்சாளர்கள் வந்ததும் ரன் சேர்க்கும் வேகம் குறைந்தது. பந்து நன்றாக திரும்பியதால், பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பாதுகாக்கவே திணறினர்.

விராட் கோலி அவுட்
ரோகித் சர்மா 15 ரன்களில் எம்புல்தேனியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நிதானமாக விளையாடிய ஹனுமா விஹாரி 81 பந்துகளை எதிர்கொண்டு 31 ரன்களை சேர்த்தார். இதனையடுத்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 23 ரன்களில் எல்பி டபிள்யூ ஆனார். பந்து சரியாக பவுன்ஸ் ஆகாததால் விராட் கோலி, அதனை தவறவிட, அது நேராக காலில் பட்டது.

இந்தியா தடுமாற்றம்
இதனால் இந்திய அணி 86 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனையடுத்து களத்துக்கு வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி தர வேண்டும் என்ற வகையில் பவுண்டரிகளாக விளாசினார். 26 பந்துகளில் அவர் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்தார்.

பண்ட் அவுட்
அப்போது எம்புல்தேனியா வீசிய பந்து, ரிஷப் பண்டின் ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால் இந்திய அணி 126 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியா 250 ரன்களை சேர்த்தாலே போதுமானது. ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்புவதால் போட்டி 3 நாட்கள் கூட நீடிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications