பர்ஸ், மொபைல் போன்
அதனால், டி20 போட்டியின் போது எதுவும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில், போட்டியின் போது பர்ஸ் மற்றும் மொபைல் போன் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படும் என மைதான நிர்வாகிகள் கூறி உள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் காவல்துறை நடவடிக்கை
2019 ஆம் ஆண்டு டிசம்பரில், திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் தொடர்பாக அசாம் மாநிலத்தில் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்ட 3,000 க்கும் மேற்பட்டவர்களை தடுத்து காவலில் வைத்து, 190 பேரை கைது செய்தது அசாம் காவல்துறை.
அசம்பாவிதங்கள்
அசாம் மாநிலத்தில் தொடர்ந்து அசாதரணமான நிலை இருக்கிறது. தற்போது போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும், சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால், அங்கே ஏதும் போராட்ட முழக்கங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடந்துவிடக் கூடாது என உறுதியாக உள்ளனர் மைதான நிர்வாகிகள்.
கட்டுப்பாடு
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் டி20 போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் பர்ஸ் மற்றும் மொபைல் போன்கள் எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அசாம் கிரிக்கெட் அமைப்பின் செயலாளர் தேவாஜித் சாய்கியா தெரிவித்தார்.
அனுமதிக்கப்படாது
இது பற்றி அவர் பேசும் போது "மொபைல் போன்கள் மற்றும் பர்ஸ் தவிர வேறு எந்த பொருளும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படாது" என்று திட்டவட்டமாக கூறினார். உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றுக்கும் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பவுண்டரி அட்டைகள்
ரசிகர்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை குறிக்கும் அட்டைகளை எடுத்துச் செல்ல அனுமதி உண்டா? என்று கேட்டபோது, "வேறு எந்த பொருளும் அனுமதிக்கப்படாது" என்று அவர் வலியுறுத்தி கூறினார்.
எந்த நடவடிக்கையும் இருக்கக்கூடாது
"போராட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒரே விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒரு கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்துள்ளோம். அதனால், இங்கே மைதானத்தில் கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் இருக்கக்கூடாது" என்றார்.
உள்ளேயே கிடைக்கும்
மேலும், "நாங்கள் இரண்டு பொருட்களை மட்டுமே அனுமதிக்கிறோம். உணவு மற்றும் தண்ணீர் உட்பட பிற பொருட்கள் மைதானத்திற்குள் கிடைக்கும்" என்று அந்த அதிகாரி உறுதியாகக் கூறினார்.