மும்பை: இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் அளித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவை பின்னுக்கு தள்ளியது எப்படி என்று ரவி சாஸ்திரி அளித்துள்ள விளக்கம் ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா புதிய கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, திடீரென சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டது ஏன் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், இந்திய அணி விளையாடும் அனைத்து டி20 போட்டிகளிலும் விளையாடக் கூடியவராக சூர்யகுமார் கடந்த 2 ஆண்டுகளில் இருந்திருக்கிறார்.
சூர்யகுமார் யாதவ் தனது பணிச்சுமையை பற்றி கவலைப்படாமல் அனைத்து போட்டிகளிலும் விளையாடியது அவர் கேப்டன்சியை பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இல்லாத நேரங்களில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை வழிநடத்திய விதம் பிசிசிஐ-க்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் மும்பை அணிக்குள் வருவதற்கு முன் கேகேஆர் அணியின் துணைக் கேப்டனாக இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் கம்பீர் அவருடன் கேப்டனாக பணியாற்றிய அனுபவமும் இருந்திருக்கிறது. அதேபோல் சூர்யகுமார் யாதவ் குறித்து மற்ற வீரர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தான். களத்திலும், களத்திற்கு வெளியிலும் சூர்யகுமார் யாதவின் செயல்பாடுகள், பணிச்சுமையுடன் சேர்த்து அனைத்து நேரங்களிலும் இந்திய அணிக்கு விளையாட தயாராக இருந்தது என்று பல்வேறு காரணங்கள் சூர்யகுமார் யாதவிற்கு சாதகமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.