மும்பை: இந்திய ஒரு நாள் அணியில் இருந்து மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதன் பின்னணியில் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கவுதம் கம்பீரை கிண்டல் செய்தது தான் காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையுடன் ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின் அவர் டெஸ்ட் அணி மற்றும் ஒரு நாள் அணியில் மட்டும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் அவரை ஒருநாள் அணியில் இருந்து நீக்கினாரா ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கவுதம் கம்பீர் குறித்த பதிவு ஒன்றை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெளியிட்டிருந்தது. அதற்கு கிண்டல் செய்யும் வகையில் ரவீந்திர ஜடேஜா பதில் அளித்து இருந்தார்.

2016 ஆம் ஆண்டு ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியில் தோனி இடம் பெற்றிருந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் செயல்பட்டார். புனே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது தோனியை ரன் குவிக்க விடாமல், ஆட்டம் இழக்க செய்ய கவுதம் கம்பீர் ஒரு அதிரடி திட்டம் ஒன்றை வகுத்தார். டெஸ்ட் போட்டிகளை போன்று தோனியை சுற்றி ஐந்து ஃபீல்டர்களை நெருக்கமாக நிற்க வைத்தார்.
இது போல, அச்சுறுத்தும் வகையில் ஃபீல்டர்களை நிறுத்துவதன் மூலம் எந்த ஒரு பேட்ஸ்மேனும் தடுமாறி ஆட்டம் இழப்பார் என்ற திட்டம் தான் இது. பொதுவாக இந்த வியூகம் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால், இதை டி20 போட்டியில் கம்பீர் பயன்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார்.
2022 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஒருவரை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி அது போன்ற ஒரு ஃபீல்டிங்கை அமைத்தது. அந்த புகைப்படத்துடன் 2016 இல் கவுதம் கம்பீர் கேப்டனாக அமைத்த ஃபீல்டிங் வியூகத்தை ஒப்பிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2022-இல் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது.
அதில் "டெஸ்ட் கிரிக்கெட்டின் இந்த பாரம்பரியமிக்க ஃபீல்டிங் வியூகம், உங்களுக்கு ஒரு டி20 மாஸ்டர் ஸ்ட்ரோக்கை நினைவு படுத்தும்" என்று குறிப்பிட்டிருந்தது. அதாவது தோனியை வீழ்த்துவதற்காக கம்பீர் அமைத்த ஃபீல்டிங் வியூகத்தை சுட்டிக்காட்டி இருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
அதற்கு பதில் அளித்த ரவீந்திர ஜடேஜா, "அது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் அல்ல. அது வெறும் ஸீன் தான்" என கிண்டல் செய்து பதில் அளித்து இருந்தார். அதன் மூலம் கவுதம் கம்பீர், தோனிக்கு எதிராக தான் ஒரு புத்திசாலி என காட்டிக்கொள்ளவே இதுபோன்ற வியூகத்தை அமைத்தார் என ஜடேஜா சுட்டி காட்டி இருந்தார். இதன் மூலம், ஜடேஜா கவுதம் கம்பீருக்கு எதிரான மன நிலையில் இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது. இதுபோல கடந்த காலத்தில் ஜடேஜா கம்பீருக்கு எதிராக இருந்ததால்தான், தற்போது கம்பீர் இந்திய அணி பயிற்சியாளர் பின் ஜடேஜாவுக்கு அணியில் இடம் அளிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.