கொழும்பு : இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படவில்லை. அவர் 2024 டி20 உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் அவர் ஒரு நாள் அணி மற்றும் டெஸ்ட் அணியில் முக்கிய வீரராக இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அவர் இந்திய ஒரு நாள் அணியின் முக்கிய வீரராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதனால், அதற்கு முன் இந்திய அணி இரண்டு ஒருநாள் தொடர்களில் மட்டுமே பங்கேற்கிறது. அதில் இலங்கை அணிக்கு எதிரான தொடரும் ஒன்று என்பதால் நிச்சயம் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு இலங்கை தொடரில் இடம் கிடைக்கவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கை தொடரில் ஓய்வு வேண்டும் எனக் கேட்ட மற்ற இரண்டு மூத்த வீரர்களை கட்டாயமாக ஆடச் சொல்லி இருக்கும் தேர்வுக் குழு, ரவீந்திர ஜடேஜாவுக்கு கட்டாயமாக ஓய்வு அளித்து இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களுக்கு ஓய்வு வேண்டும் என பிசிசிஐ-இடம் கேட்டிருந்தனர்.
ஆனால், புதிய பயிற்சியாளராக வந்திருக்கும் கவுதம் கம்பீர் அவர்களுக்கு ஓய்வு அளிக்க மறுத்துவிட்டார். அதன் காரணமாக, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்தத் தொடரில் இடம் பெற்றனர். அப்படி பார்த்தால் ரவீந்திர ஜடேஜாவும் இந்த தொடரில் இடம் பெற்ற இருக்க வேண்டும். அவர் தனக்கு விடுப்பு வேண்டும் என கேட்கவில்லை. ஆனால், அவர் இந்த ஒரு நாள் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக பேட்டிங் திறன் கொண்ட சுழற் பந்துவீச்சாளர்களான அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரிடம் கேட்கப்பட்ட போது, "ரவீந்திர ஜடேஜாவுக்கு நாங்கள் ஓய்வு அளித்து இருக்கிறோம். அக்சர் பட்டேல் அணியில் இருக்கும் நிலையில், அதே அணியில் ரவீந்திர ஜடேஜாவையும் நாங்கள் தேர்வு செய்தால் மொத்தமுள்ள மூன்று போட்டியில் இவர்கள் இருவரும் எத்தனை போட்டிகளில் விளையாட முடியும்? ஒரே நேரத்தில் இவர்கள் இருவரும் அணியில் விளையாட முடியாது என்பதால் நாங்கள் ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்யவில்லை" என்றார்.
இதன் மூலம் மறைமுகமாக ரவீந்திர ஜடேஜா ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்பட்டாலும், அவருக்கு வாய்ப்பு கிடைக்காது. அக்சர் பட்டேலுக்கு தான் இனி வாய்ப்பு என சொல்லாமல் சொல்லி இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா ஒரு நாள் அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் வாட்டர் பாயாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஒரு உள் அர்த்தத்தில் இதை சொல்லி இருக்கலாம்.
2024 டி20 உலகக் கோப்பையில் கூட ரவீந்திர ஜடேஜா அனைத்து போட்டிகளிலும் இடம் பெற்றார். ஆனால், அவர் அதிக ஓவர்கள் பந்து வீசும் வாய்ப்பை பெறவில்லை. மேலும், பேட்டிங்கிலும் அவரை விட அக்சர் பட்டேலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அப்போதே ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் ஓரங்கட்டப்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமானது. தற்போது புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்திருக்கும் நிலையில் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரும் சேர்ந்து ரவீந்திர ஜடேஜாவின் ஒருநாள் அணி வாய்ப்புக்கு மூடு விழா நடத்தி உள்ளனர்.