மும்பை: இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இதற்கான அட்டவணை நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பிசிசிஐ மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இணைந்து சில மாற்றங்களை செய்து அறிவித்துள்ளது.
ஆசியக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி முதல்முறையாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கைக்கு செல்லும் இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீருக்கு முதல் சுற்றுப்பயணம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி தேர்வு ஜூலை 22ஆம் தேதி நடக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. இதனிடையே நேற்று முன் தினம் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி ஜூலை 26ஆம் தேதி நடக்கும் முதல் டி20 போட்டி பாலக்காலே மைதானத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2வது டி20 போட்டி ஜூலை 27ஆம் தேதியும், கடைசி டி20 போட்டி ஜூலை 29ஆம் தேதி பாலக்காலே மைதானத்தில் நடக்கவுள்ளது.
பின்னர் ஆகஸ்ட் 1ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியும், ஆகஸ்ட் 4ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டியும், ஆகஸ்ட் 7ஆம் தேதி 3வது ஒருநாள் போட்டியும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு இடையில் வெறும் ஒருநாள் மட்டும் இடைவெளி இருந்தது. இதனால் ஒருநாள் தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட அட்டவணையின் படி ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியும், ஆகஸ்ட் 4ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டியும், ஆகஸ்ட் 7ஆம் தேதி கடைசி ஒருநாள் போட்டியும் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்த நிர்வாகமும் விளக்கம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.