IND vs SL: சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பண்ட்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாதனை
மும்பை: இந்தியாவின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவின் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்து, கேப்டன் சுப்மன் கில்லை முந்தினார்.
கொழும்புவில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளையின் போது, இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 419 ரன்கள் எடுத்திருந்தபோது, பந்த் 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த், தற்போது 2948 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதே எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 2917 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 40 போட்டிகளில் 2716 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 50 போட்டிகளில் 2,675 ரன்கள், விராட் கோலி 46 போட்டிகளில் 2617 ரன்கள் அதற்கு அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.
தற்போதைய இந்திய வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 போட்டிகளில் 2588 ரன்களுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார். இந்த இன்னிங்ஸில் பந்த் எட்டிய மற்றொரு முக்கியமான சாதனையைத் தொடர்ந்து இந்த புதிய மைல்கல் வந்துள்ளது. வெளிநாடு அல்லது பொதுவான மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், விக்கெட் கீப்பராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.
இந்த பிரிவில் 2500 ரன்களைக் கடந்த பந்த், தோனியின் 2496 ரன்கள் சாதனையை முறியடித்தார். தோனி 32.84 சராசரியைக் கொண்டுள்ள நிலையில், பந்த் கிட்டத்தட்ட 42 சராசரியுடன் இந்த சாதனையை எட்டியுள்ளார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில், அறிமுக வீரர் சரண்ஷ் ஜெயின் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு பந்த் மீண்டும் களம் திரும்பினார். துருவ் ஜூரெலுடன் இணைந்து இந்தியாவின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டு வந்தார். இந்த ஜோடி இலங்கையின் வேகப்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு, மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக இந்தியாவின் ஸ்கோரை 400 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றது.
இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு அணி 400 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைக் குவிப்பது இது 11வது முறையாகும். இதற்கு முன் நடந்த 10 போட்டிகளில், ஆறு போட்டிகளில் வெற்றியும், நான்கு போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளன.
இலங்கையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் 7வது விக்கெட் அல்லது அதற்கு கீழே 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டு இதே மைதானத்தில் சேதேஷ்வர் புஜாரா மற்றும் அமித் மிஸ்ரா ஜோடி 104 ரன்கள் சேர்த்ததே முந்தைய சாதனையாக இருந்தது.


Click it and Unblock the Notifications

